Close
மார்ச் 7, 2026 6:03 மணி

பால் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் டிச. 29 முதல் பால் நிறுத்தப் போராட்டம்: விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தீர்மானம்

நாமக்கல்லில் நடைபெற்ற, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி பேசினார்.

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கக்கோரி, வருகிற டிச. 29ம் தேதி முதல் மாநிலம் தழுவிய பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என நாமக்கல்லில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், நாமக்கல்லில் நடைபெற்றது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்:

தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமாக கால்நடை வளர்ப்பு தொழில் உள்ளது. கால்நடை தீவனத்திற்கான மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் ஒரு லிட்டர் பால் உற்பத்தி செய்ய ரூ. 65 வரை செலவாகிறது. தமிழகத்தில் ஆவின் கூட்டுறவு நிறுவனம் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ. 30 மட்டுமே வழங்குகிறது. விவசாயிகளுக்கு பால் விலை கட்டுபடியாகாத காரணத்தால் பல கறவை மாடுகளை விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஒரு லிட்டர் பாலுக்கு, மாநில அரசு ரூ. 6 மானியம் வழங்குகிறது. தமிழக அரசு ரூ. 3 மட்டுமே வழங்குகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்துப் பேசி ஒரு லிட்டர் பாலுக்கு ரூ. 15 வீதம் உயர்த்தி வழங்க வேண்டும்.

வருகிற டிசம்பர் மாதம் 28ம் தேதிக்குள் பால் விலையை உயர்த்தி வழங்காவிட்டால், டிசம்பர் 29ம் தேதி காலை முதல், தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து, மாநில அளவில் ஆவின் நிறுவனத்திற்கு பால் நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பால் உற்பத்தியாளர்களுக்கு ஆவின் மூலம் 50 சதவீதம் மானியத்தில் தீவனம் வழங்க வேண்டும், ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும், கறவை மாடு பெண் கன்று ஈன்றால் மாட்டிற்கு 10 மாதம் வரை அரசு இலவசமாக தீவனம் வழங்க வேண்டும், ஆவினுக்கு பால் சப்ளை செய்யும் உற்பத்தியாளர்களின் குடும்பங்களுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டம் வழங்கவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர், தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் அனுமந்தராசு, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் திருமூர்த்தி, ஜெயராமன், ராஜாபெருமாள், கண்ணையா, ராம்குமார், ரவீந்திரன், ஏழுமலை, சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top