Close
ஏப்ரல் 23, 2026 10:02 மணி

நாமக்கல்லில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா: ரூ. 72 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில், சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவுத் துறை பணியாளர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் கேடயம் வழங்கினார். அருகில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார், எம்.பி.,

நாமக்கல்லில் கூட்டுறவுத்துறையின் சார்பில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார், எம்.பி., தலைமை வகித்துப் பேசினார். நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி முன்னிலை வகித்தார்.

விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது: நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நாள்தோறும் ரூ.5 கோடி என ரூ.1,825 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நாள்தோறும் ரூ.7.50 கோடி என ரூ. 2,735 கோடியும், அடுத்த ஆண்டு தினசரி ரூ.10 கோடி என ரூ.3650 கோடி வழங்கப்படவுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய அடையாளமாக மத்திய கூட்டுறவு வங்கி மாறியுள்ளது. நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது மாநில அளவில் சிறப்பான கூட்டுறவு வங்கியாக திகழ அனைத்து நிர்வாகிகளும், பணியாளர்களும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.

தொடர்ந்து, 3,487 பயனாளிகளுக்கு ரூ. 41.01 கோடி மதிப்பில் வட்டியில்லா பயிர்கடன், 825 பயனாளிகளுக்கு ரூ.7.10 கோடி மதிப்பில் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு கடன் என மொத்தம் 4,777 பயனாளிகளுக்கு ரூ. 72.07 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மேலும், மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய 40 கூட்டுறவு நிறுவனங்கள், சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 29 பள்ளி மாணவ, மாணவியர், கலைநிகழ்ச்சிகள் நடத்திய 4 பள்ளிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் முன்னாள் எம்எல்ஏ மூர்த்தி, மாநகராட்சி துணை மேயர் பூபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் சந்தானம் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top