நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் இருந்து பெறப்படும் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியல் திருத்த மனுக்களின் நிலை குறித்து உடனுக்குடன் கண்டறிய, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் எஸ்ஐஆர் சிறப்பு முகாமில் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து திரும்ப பெறுவதற்கு, அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் நேற்று 22ம் தேதி மற்றம் இன்று 23ம் தேதி சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதனைத் தொடர்ந்து, முகாமில் பெறப்படும் மனுக்களின் நிலை குறித்து உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கு வசதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டு அறையில் சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவிகள், சம்பந்தப்பட்ட வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை தொடர்பு கொண்டு பெறப்பட்ட மனுக்களின் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை பார்வையிட்டார். மேலும், நாமக்கல் மாநகராட்சி கூட்ட அரங்கில் வாக்காளர், எஸ்ஐஆர் சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களை பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றதை பார்வையிட்டார்.
ராசிபுரம், சேந்தமங்கலம், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகளை சம்மந்தப்பட்ட வாக்காளர் பட்டியல் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.




