Close
மார்ச் 7, 2026 2:51 மணி

நாமக்கல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அலங்காரம் செய்ய 1 லட்சத்து 8 வடைகள் தயார்: உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வால் பரபரப்பு

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 1 லட்சத்து 8 வடை தயாரிப்பு பணிகளை, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, 1,00,008 வடை தயாரிக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. வடை தயாரிப்பை உணவு பாதுகாப்புத்துறையினர் திடீர் ஆய்வு செய்தது பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட, 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில், மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு, வரும் 19ல், ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

விழாவை முன்னிட்டு, ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 19ம் தேதி அதிகாலை 5 மணிக்கு, 1,00,008 வடைமாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதற்காக, கடந்த, 14ம் தேதி முதல் கோயில் மண்டபத்தில் வடைகள் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மாலை கோர்ப்பதற்காக தயார் செய்யப்பட்டுள்ள வடைகள்.

நாளை காலை வடை தயாரிக்கும் பணி நிறைவு பெற்று பின்னர் வடைகள் மாலையாக கோர்க்கப்படும். 1 லட்சத்து 8 வடை தயாரிப்பதற்காக, 2,250 கிலோ உளுத்தம் மாவு, 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 82 கிலோ உப்பு ஆகிய பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் செல்வகுமார், சுபஸ்ரீ ஆகியோர், கோயில் மண்டபத்தில் வடை தயாரிக்கும் பணியை திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது, வடை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களான உளுத்தம் மாவு, மிளகு, சீரகம், உப்பு போன்ற பொருட்கள் தரமானதாக உள்ளதா என சோதனை செய்தனர். மேலும், வடை தயார் செய்த பின், மீண்டும் அந்த எண்ணெய் பயன்டுத்தப்படுகிறதா, பணியாளர்களின் தன் சுத்தம் குறித்தும் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ததால், கோயில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top