பழைய லாரிகள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான எப்.சி. கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன், மத்திய போக்குவரத்து அமைச்சரிடம் நேரில் கோரிக்கை விடுத்தார்.
நாமக்கல் கொமதேக எம்.பி. மாதேஸ்வரன், டில்லியில் மத்திய தரைவழிப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:
இந்திய அளவில் நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் உள்ளன. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், சமீபத்தில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய லாரிகள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு எப்.சி. கட்டணத்தை சுமார் 10 மடங்கிற்கு மேல் உயர்த்தியுள்ளது. இது லாரி உரிமையாளர்களை கடுமையாக பாதித்துள்ளது.
லாரிகளுக்கான எப்.சி. கட்டணம் ஏற்கனவே ரூ. 850 ஆக இருந்தது. தற்போது கட்டண உயர்விற்குப் பிறகு 10 ஆண்டுகள் வரையிலான லாரி மற்றும் கனரக வாகனங்களுக்கு ரூ. 1,420, 11 முதல் 13 ஆண்டுகள் வரையிலான வாகனங்களுக்கு ரூ. 2,220, 14 முதல் 15 ஆண்டுகள் வரையிலான வாகனங்களுக்கு ரூ. 6,220, 16 முதல் 20 ஆண்டுகள் வரையிலான வாகனங்களுக்கு ரூ. 14,220, மற்றும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ.28,220 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்த வாகனங்கள் நெல் மற்றும் அரிசி போன்ற விவசாயப் பொருட்களை ஏற்றிச் செல்லவும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு ரயிலில் வரும் பொருட்களைக் கையாளவும், அரிசி, கோதுமை, மக்காச்சோளம் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் அவர்களே டிரைவர்களாக வேலை பார்த்து தினசரி வருமானம் ஈட்டி குடும்பம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசால் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள எப்.சி. கட்டண உயர்வின் காரணமாக, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒன்று அல்லது இரண்டு பழைய வாகனங்களை வைத்து தங்கள் குடும்பத்தை நடத்தி வரும் லாரி உரிமையாளர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, லாரிகளை விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, மத்திய அரசு உடனடியாக மோட்டார் வாகனங்களுக்கான எப்.சி. கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.




