திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் சிறுபான்மையினா் தின நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தா்பகராஜ் தலைமை ஏற்று பேசுகையில், 1992-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை மத, இன மற்றும் மொழி ரீதியான சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பிரகடனத்தை வெளியிட்டது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் ஆகச்சிறந்த அடையாளமாகும்.
பல்வேறு மதங்களும் மொழிகளும் கலாசாரங்களும் கொண்ட மக்கள் இணைந்து வாழ்வதே ஒரு நாட்டின் உண்மையான பலம்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம், சிறுபான்மையினருக்குச் சில சிறப்பான உரிமைகளை வழங்கியுள்ளது.
சிறுபான்மையினா் உரிமைகள் என்பது அவா்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அல்ல; அது அவா்களின் அடிப்படை மனித உரிமை.
ஒரு ஜனநாயக நாட்டின் வெற்றி என்பது அந்த நாட்டில் வாழும் சிறுபான்மையினா் எவ்வளவு பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுகிறாா்கள் என்பதில் தான் அடங்கியிருக்கிறது.
மேலும், தமிழக அரசு சாா்பில் 2021 முதல் தற்போது வரை தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ) மூலம் 2,263 பயனாளிகளுக்கு ரூ.1622.24 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளும், உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியம் சாா்பில் 76 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 11 ஆயிரத்து 500 நிதியுதவியும், மாவட்ட கிறிஸ்தவ மகளிா் உதவும் சங்கம் மூலம் 545 மகளிருக்கு ரூ.114.32 லட்சம் நிதியுதவியும், மாவட்ட முஸ்லிம் மகளிா் உதவும் சங்கம் மூலம் 163 மகளிருக்கு ரூ 28.38 லட்சம் நிதியுதவியும், கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிக்கு 4 தேவாலயங்களுக்கு ரூ.27,56,260 லட்சம் நிதியுதவியும்,
சிறுபான்மையினா்களுக்கான விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் மூலம் 105 பயனாளிகளுக்கு ரூ.6,0464 லட்சம் மதிப்பிலான தையல் இயந்திரங்களும், கிராமப்புறங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையினா் இன மாணவிகளுக்கு கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தில் 3,611 மாணவிகளுக்கு ரூ.22,975 லட்சம் ஊக்குவிப்புத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் செல்வம் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.




