நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் தொடர்பான சிறப்பு முகாம் நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் டிசம்பர் 27 மற்றும் 28-ம் தேதி, ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாமில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ள வாக்காளர்கள், 2026-ம் ஆண்டு ஜன., 10-ம் தேதியில் 18 வயது பூர்த்தியடையும் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் மற்றும் முகவரி திருத்தம் தொடர்பான மனுக்களை அந்தந்த வாக்குசாவடி மையங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம்.
போதுமான அளவு விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இருப்பு வைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், ஆர்டிஓ, தாசில்தார் அலுவலகங்களுக்கு நேரில் சென்று, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை அளித்து தங்களது பெயரை பதிவு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




