நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 23 பயனாளிகளுக்கு, ரூ. 90,500 மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் ரோடு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 572 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலினை செய்து, உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, தாட்கோ சார்பில், தமிழக தூய்மை பணியாளர் நல வாரியம் மூலம், 23 பேருக்கு கல்வி உதவித்தொகை, இயற்கை மரண நிதி என மொத்தம் ரூ. 90,500 மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., சரவணன், சமூகப் பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




