Close
மார்ச் 7, 2026 7:19 மணி

நாமக்கல்லில் பாதாள சாக்காடைக்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

நாமக்கல்லில் தெருவில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன், பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் பெற்றோருக்கு மாநகராட்சி சார்பில் இழப்பீடாக ரூ. 20 லட்சம் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு, சின்னமுதலைப்பட்டி கடகால் வீதியில் பாதாள சாக்கடை பணிக்காக சுமார் 5 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளது. இதில் நீரூற்று ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நின்றது.

ஜன.1 புத்தாண்டு என்பதால் தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி மணிகண்டன் – ரதிபிரியா தம்பதியினரின் மகன் ரோகித் (வயது 4), 1ம் தேதி மாலை தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.

தாத்தா வீரன் வீட்டின் முன்பு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் சிறுவன் கிடைக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் பாதாள சாக்கடை குழியில் தேங்கி நின்ற தண்ணீரில் இறங்கி தேடி உள்ளனர்.

அப்போது அங்கு சிறுவன் ரோகித், நீரில் மூழ்கி சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் சிறுவன் ரோகித்தின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்ற நாமக்கல் போலீசார் சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாமக்கல் மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழியில் சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் நாமக்கல்லில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெருவில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன் ரோகித், பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக, நாமக்கல் மாநகராட்சி சார்பில் இழப்பீட்டு நிவாரண தொகை ரூ. 20 லட்சத்தை, சிறுவனின் பெற்றோர்களிடம் மாநகராட்சி கமிஷனர் சிவகுமார் வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top