நாமக்கல் மாவட்டத்தில் வெப்ப அலைகள் உருவாகி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், அதிகம் தண்ணீர் தேவைப்படும் பயிர்கள் சாகுபடி செய்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார், .
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் எல்நினோ காலநிலை தாக்கத்தால் பருவமழை தாமதம், மழைப்பொழிவு குறைதல், அதிக வெப்பநிலை மற்றும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், விதைப்பு தாமதம் ஏற்படும்.
கதிர் வரும் நேரத்தில் நீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. தோட்டக்கலை பயிர்களில் வாழை, மா, காய்கறிகள் போன்ற பயிர்களுக்கு வெப்பத்தால் வாடல், காய் உதிர்வு, பூச்சி தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள் போன்ற பயிர்களுக்கு காய் பிடிப்பு குறைவு மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே விவசாயிகள் வானிலை முன்னறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து அதற்கேற்ப விதைப்பு மற்றும் சாகுபடி பணிகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும். பண்ணை குட்டைகள் அமைத்து மழைநீரினை சேகரிக்க வேண்டும்.
அதிக நீர் தேவைப்படும் கரும்பு, வாழை போன்ற பயிர்கள் சாகுபடியினை தவிர்க்கவேண்டும். குறைந்த நீர் தேவையுள்ள மற்றும் வறட்சியை தாங்கி வளரக் கூடிய சிறுதானியங்கள், பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்கள் ரகங்களினை தேர்வு செய்து சாகுபடி செய்ய வேண்டும்.
மழை தாமதமானால் தாமதமாக விதைப்பு மேற்கொள்ள வேண்டும். விதை அளவினை 15-25 சதவீதம் உயர்த்தி விதைக்கவேண்டும். பிரதமரின் திட்டத்தில் பயிர் காப்பீடு மேற்கொள்ளவேண்டும். வெப்ப அலைகள் தாக்கம் அதிகம் இருக்ககூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் வயல்வெளி வேலைகளை காலை 11.00 மணிக்கு முன்பும், பிற்பகல் 3.00 மணிக்கு பின்பும் மேற்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




