Close
மார்ச் 7, 2026 6:03 மணி

பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்குவதற்காக கரும்பு வயல்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்களுக்கு கரும்பு வழங்குவதற்காக, குமாரபாளையம் பகுதியில் உள்ள கரும்பு வயல்களை, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில், பொதுமமக்களுக்கு பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்குவதற்காக, குமாரபாளையம் பகுதியில் உள்ள கரும்பு வயல்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் தாலுகா பகுதிகளில், தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மைத் துறையின் சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது: நுண்ணீர் பாசனம் என்பது, பயிர்களுக்குத் தேவையான நீரை மிகத் துல்லியமாகவும், சிக்கனமாகவும் வழங்கும் ஒரு நவீன விவசாய நுட்பமாகும், இதில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் ஆகியவை அடங்கும். இந்த பாசன முறை, நீர் மற்றும் உரங்களை வேர்ப்பகுதிக்கு நேரடியாக வழங்குவதன் மூலம் மகசூலை அதிகரித்து, நீரைச் சேமிக்க உதவுகிறது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத் துறையின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், ரூ. 50.45 கோடி மானியத்தில் 6,684 விவசாயிகளுக்கு 100 சதவீதம் மற்றும் 75 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனமும், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ. 12.03 கோடி மானியத்தில் 42,103 விவசாயிகளுக்கு, உயிர் உரங்கள் செயல் விளக்கங்கள் மற்றும் விதைகள், தோட்டக்கலைத்துறையின் சார்பில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், 10,098 சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் என மொத்தம் ரூ. 103.91 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் 8,028 பயனாளிகளுக்கு பரப்பு விரிவாக்கம், நிரந்தர பந்தல் உள்ளிட்ட இனங்களின் கீழ் ரூ.8.74 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.

அதனைத் தொடர்ந்து, குமாரபாளையம் தாலுகா, சமயசங்கிலி அக்ரஹாரம் பகுதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு வழங்குவதற்காக, கூட்டுறவுத்துறையின் மூலம் கரும்பு கொள்முதல் செய்தல் தொடர்பாக, கரும்பு வயல்களைப் பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வுகளின்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, வேளாண்மை இணை இயக்குநர் மல்லிகா, தோட்டக்கலைத் துணை இயக்குநர் புவனேஷ்வரி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top