Close
மார்ச் 7, 2026 1:25 மணி

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி மறியல்: அங்கன்வாடி பணியாளர்கள் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் அங்கன்வாடி பணியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, நாமக்கல்லில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,025 அங்கன்வாடி பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடந்தது. நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு, சங்க மாவட்ட செயலாளர் பிரேமா தலைமை வகித்தார்.

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக உடனடியாக அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் பணி ஓய்வு பெறும்போது, ஊழியர்களுக்கு பணிக்கொடையாக ரூ. 10 லட்சம், உதவியாளர்களுக்கு, ரூ. 5 லட்சம் வீதம் வழங்க வேண்டும்.

அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக, மாதம் ரூ. 9,000 வழங்க வேண்டும். தி.மு.க., தேர்தல் வாக்குறுதி எண். 313ஐ நிறைவேற்ற வேண்டும். மே மாதம், விடுமுறை ஒரு மாதமாக வழங்க வேண்டும்.

குழந்தைகளின் பாதுகாப்பையும், முன்பருவ கல்வியின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, 1,025 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை உதவி காவல்  கண்காணிப்பாளர், ஆகாஷ்ஜோஷி, கூடுதல் எஸ்.பி. தனராசு ஆகியோர் தலைமையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் கபிலன் மற்றும் காவல்துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்கவைத்தனர்.

பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top