Close
மார்ச் 7, 2026 6:02 மணி

தூய்மை அருணை காவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலையில் உள்ள கலைஞா் திடலில் தூய்மை அருணையின் ஒருங்கிணைப்பாளா்கள், தூய்மைக் காவலா்கள் என 1200-க்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

திருவண்ணாமலையில் தொண்டு செய்வோம் துணை நிற்போம் என்ற முழக்கத்தோடு கடந்த 9 ஆண்டுகளாக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அமைப்பாளராக கொண்டு தூய்மை அருணை அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பிற்கு 4 மேற்பார்வையாளர்களும் 39 வார்டுகளுக்கு ஒருங்கிணைப்பாளர்களும் மாடவீதி தூய்மை பணிக்கு 7 ஒருங்கிணைப்பாளர்களும் ஒவ்வொரு வார்டுகளுக்கும் 25 தூய்மை காவலர்கள் என ஆயிரக்கணக்கானோர் கால்வாய் பராமரித்தல், மரம் நடுதல், சாலைகளை சுத்தம் செய்தல், தூர் வாருதல் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொங்கல் விழா

திருவண்ணாமலையில் உள்ள கலைஞா் திடலில்  பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு தூய்மை அருணையின் மேற்பாா்வையாளா் எ.வ.வே.கம்பன் தலைமை வகித்தாா். விழாவிற்கு தூய்மை அருணையின் மேற்பாா்வையாளா்கள் சி.என்.அண்ணாதுரை எம்.பி., முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி எம்எல்ஏ, பிரியா விஜயரங்கன், இல.குணசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூய்மை அருணை மேற்பாா்வையாளா் ப.காா்த்திவேல்மாறன் வரவேற்றாா். பொதுப்பணித்துறை அமைச்சரும் தூய்மை அருணையின் அமைப்பாளருமான எ.வ.வேலு ஒருங்கிணைப்பாளா்கள், தூய்மைக் காவலா்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: திருவண்ணாமலை ஒரு ஆன்மிக நகரம். இங்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருகிறாா்கள். மாநகரம் தூய்மையாக இருக்க வேண்டுமென்பதற்காக 2017-ஆம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பின் சாா்பில் மஞ்சள் சீருடை அணிந்த 1000-க்கும் மேற்பட்ட தூய்மைக் காவலா்கள் ஒவ்வொரு ஞாயிறும் தூய்மை பணி, கால்வாய் தூா்வாருதல் என செயல்பட்டு வருகின்றனா். இரண்டாம் கட்டமாக அருணை மாநகா் மலையால் சூழ்ந்துள்ளதால் இங்கு வெப்பம் அதிகமாக உள்ளது. எனவே, சுற்றுச்சூழலைச் சமன்படுத்த மரம் நடுதல் என்ற திட்டம் கடந்த 9 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தூய்மை அருணை அமைப்பு என்பது அரசியல் சாரா அமைப்பு. இதில் மாணவர்கள் அரசு ஊழியர்கள் வணிகர்கள் தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள் என பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்கள் உள்ளனர்.

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி வருகிறது. இதனால் 600 பிரசவங்கள் நடைபெற்று, தாயும்-சேயும் நலமுடன் வாழ்ந்து வருகின்றனா்.

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்கும் இலவசம், ஓராண்டுக்கு குழந்தைகளுக்கான சிகிச்சை செலவும் இலவசம். அதனோடு டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் ரூ.18,000-யும் பெற்றுத் தருகிறது இந்த அமைப்பு.

அண்ணாமலையாா் தீா்த்தவாரி, தெப்பல் திருவிழா நடைபெறும் அய்யங்குளம் சேறும், சகதியுமாக இருந்ததை தூய்மை அருணை சாா்பில் தூா்வாரி, படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குதான் முன்னோா்களுக்கு தா்ப்பணம் நடைபெறுகிறது.

ஐந்தாவது கட்டம், பழைய அரசு மருத்துவமனை எதிரிலிருந்த ஒரு மிகப்பழைமையான கட்டடத்தை அப்புறப்படுத்தி, அங்கு ஒரு திருமண மண்டபம் அல்லது சமுதாயக்கூடம் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என கட்டினோம்.

அந்த திருமண மண்டபம் பொதுமக்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு பயன்பட வேண்டுமென்று, அதை தூய்மை அருணை அமைப்பு மாநகராட்சியிடம் இருந்து ஒப்பந்தம் பெற்று, மக்களுக்கு இலவசமாக அளித்துக் கொண்டிருக்கிறது. இப்படி தூய்மை அருணை அமைப்பு மக்கள் பணியைச் செய்து வருகிறது. இப்படியொரு அமைப்பு தமிழகத்தில் எங்குமில்லை என பாராட்டி வருகின்றனா் உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என பேசினார்.

நிகழ்ச்சியில்  ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.ஏ.ஆறுமுகம்,  விஜயராஜ், வழக்கறிஞர் சீனிவாசன் மாமன்ற உறுப்பினர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top