நாமக்கல் மாநகராட்சி பகுதியில் தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என, கூட்டத்தில் திமுக கவுன்சிலர் வலியுறுத்தினார்.
நாமக்கல் மாநகராட்சியில், அவசர மற்றும் சாதாரண கவுன்சில் கூட்டம் நடந்தது. மேயர் கலாநிதி தலைமை வகித்தார். துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம் விபரம்:
ஈஸ்வரன் (கவுன்சிலர்): சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், பொதுமக்களின் தேவைளை கருத்தில் கொண்டு, தெருவிளக்கு, ரோடு வசதிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, தெருவிளக்கு அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றை முன்னுரிமை அளித்து, தேவையான இடங்களில் தெருவிளக்கு அமைக்க வேண்டுமம்.
மேலும், பாதாள சாக்கடை திட்டத்தை காரணம் காட்டி, பல்வேறு இடங்களில் ரோடு வசதி மேற்கொள்ளவில்லை. பாதாள சாக்கடை பணிகளையும், ரோடு பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
சரவணன் (கவுன்சிலர்) : நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், பொதுமக்கள் குறிப்பாக, பள்ளி, மாணவ, மாணவியர், குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தெரு நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த அவசர கூட்டத்தில் 84 தீர்மானங்கள், சாதாரண கூட்டத்தில் 56 தீர்மானங்கள் என, மொத்தம் 140 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.




