தமிழகத்தில் பாஜக, என்டிஏ கூட்டணியைப் பார்த்து திமுகவிற்கு கூட்டணி பயம் ஏற்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துணை இணை அமைச்சர் எல்.முருகன் குடும்பத்துடன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு வந்தார். அங்கு அவர் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது பிரதமர் மோடி பெயரில் அவர் அர்ச்சனை செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் உள்ள அனைவரும் நலம்பெற வேண்டும், இந்தியா மேலும் வளம்பெற வேண்டும் என ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்தேன்.
பிப்ரவரி 23 தமிழகம் முழுவதும், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வீடுகள், பொது இடங்களில் கந்தசஷ்டி பாராயணம் பாட வேண்டும் என, இந்து முன்னணி உள்ளிட்ட இயக்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவை தி.மு.க., அரசு மதிக்கவில்லை. அந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, வீடுகளில் அனைவரும் கந்தசஷ்டி கவசம் பாட வேண்டும்.
வருகிற மார்ச் 1ம் தேதி மதுரையில் நடைபெறும் பாஜக, என்டிஏ கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசுகிறார். இபிஎஸ், அன்புமணி, வாசன், தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் கலவரத்தை தூண்ட சதி செய்கிறார்கள் என, ஒரு சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய மாநில முதல்வர் பொறுப்பில்லாமல் அறிக்கை விடுகிறார். இது பாஜ, என்டிஏ கூட்டணியைப் பார்த்து திமுகவிற்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
தமிழக அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, இது தமிழகத்தில் ஊழல் எந்த அளவிற்கு மலிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. தமிழக முதல்வர் ஊழல்செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், ஊழலுக்கு துணை போகிறார். இதற்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பார்கள்.
டில்லியில் நடைபெற்ற சர்வதேச ஏஐ தொழில்நுட்ப மாநாடு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநாட்டில், 40 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த மாநாட்டின் பயனாக, பல்வேறு நாடுகளின் முதலீடுகள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் இளைர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதோடு அவர்களை தொழில் முனைவோராக மாற்றும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் சரவணன் உள்ளிட்ட பாஜவினர் கலந்துகொண்டனர்.




