நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ள 472 முதுகலை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் நாமக்கல் ராமு, மாவட்ட சிஇஓவிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. இப்பணிகளுக்கு, கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், ஒவ்வொரு கலெக்டரின் வழிகாட்டுதல்படி, சிஇஓ மற்றும் டிஇரு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் மேற்பார்வையாளர்களாக, 472 முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதுகலை ஆசிரியர்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, நடப்பு ஜூன் முதல், டிச., வரை கற்றல் கற்பித்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபடுவர்.
ஜூன் தொடங்கி, நவ., க்குள் அனைத்து பாடங்களையும் நிறைவு செய்து, டிசம்பரில் முழு பாடத்திற்கான அரையாண்டு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதுகலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கூடுதல் சிறப்பு பயிற்சி அளித்து, காலை, மாலை சிறப்பு வகுப்புகள், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள், சிறு குறு தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடுவர். மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்கள் அனைவரும், அப்பள்ளியில் அப்பாடத்திற்கு ஒரே ஆசிரியராக பணிபுரிபவர்கள். இப்பணியால், ஒட்டுமொத்த மேல்நிலை வகுப்புகளும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ளது.
அதனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்பார்வையாளர் பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ள, முதுகலை ஆசிரியர்களை, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, அப்பணியில் இருந்து முழுமையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




