வளைகுடா நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை பயன்படுத்தி, எரிவாயு விநியோகத்திற்கான புதிய முன்னுரிமைப் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைச் சமாளிக்க, உள்நாட்டில் கிடைக்கும் இயற்கை எரிவாயு விநியோகத்தில் மத்திய அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளது.
இதன்படி: வீடுகளுக்கான குழாய் எரிவாயு 100% தடையற்ற விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான சிஎன்ஜி 100% தட்டுப்பாடின்றி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வீடுகளுக்குத் தேவையான எல்பிஜி சிலிண்டர் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயு விநியோகத்தில் வீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, பிற துறைகளுக்கான விநியோகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காகச் சுத்திகரிப்பு ஆலைகளுக்கான இயற்கை எரிவாயு விநியோகத்தில் 35% குறைக்கப்பட்டு, அது எல்பிஜி தயாரிப்பிற்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
சிலிண்டர்களைப் பதுக்குவதைத் தவிர்க்கவும், கறுப்புச் சந்தையைத் தடுக்கவும், இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்ற புதிய விதியைக் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா தனது இயற்கை எரிவாயு தேவையில் 30 சதவீதத்தை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பெறுகிறது. தற்போதைய போர்ச் சூழலால் அங்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்துச் சிக்கல்களைத் தவிர்க்க, மாற்றுப் பாதைகள் வழியாக எரிவாயுவை வாங்க அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் வணிக ரீதியான சிலிண்டர் பயன்படுத்துவோரின் தேவைகளை ஆய்வு செய்து, அவர்களுக்குத் தேவையான எரிவாயுவை வழங்க மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவை அமைச்சகம் அமைத்துள்ளது. “தற்போதைய பூகோள அரசியல் சூழலில், குடிமக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதே அரசின் முதல் கடமை” என பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.




