தக்காளி, சின்ன வெங்காயத்திற்கு நியாயமான விலையை, அரசு நிர்ணயம் செய்யக்கோரி, தமிழக விவசாயிகள் முன்னேற்றக் கழகம் சார்பில் திரளான விவசாயிகள் வெங்காய மாலை அணிந்து வந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக மனுகள் பெட்டியில் கோரிக்கை மனுவைப் போட்டனர்.
இது குறித்து, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் கோவை, ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தக்காளி, சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது, தக்காளி விலை கிலோ ரூ. 6க்கும், சின்ன வெங்காயம் ரூ. 10க்கும், வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தக்காளி விலை அதிகமாக இருக்கும் போது, பசுமை குடில்கள் அமைத்து ரேஷன் கடைகளில் விற்பனை செய்கின்றனர். தக்காளி, சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ள நேரத்தில் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் கண்டு கொள்வதில்லை.
அதனால், தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 30 கிடைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.




