Close
ஏப்ரல் 24, 2026 3:56 காலை

பத்து தோல்வி பழனிச்சாமி வரும் தேர்தலில் படுதோல்வி பழனிச்சாமியாக மாறுவது உறுதி: ஓபிஎஸ்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் சோழவந்தான் தொகுதி அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, அமைச்சர் பி..மூர்த்தி தலைமை தாங்கினார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது: சோழவந்தான் தொகுதி நடைபெறக்கூடிய இந்த எழுச்சிமிகு செயல் பெற கூட்டத்தில் கூடியிருக்க கூடிய மக்களின் முகத்தின் தெரியக்கூடிய எழுச்சியே வெற்றிக்கு அட்சாரமாக அமைய உள்ளது.

மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான சகோதரர் மூர்த்தி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பணியை ஆரம்பித்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகத்தை இந்த மாவட்டத்தில் வகுத்து வைத்துள்ளார். எனவே, திமுகவின் வெற்றி என்பது மதுரை வடக்கு மாவட்டத்தில் நிச்சயிக்கப்பட்ட ஒரு வெற்றியாக தெரிகிறது.

தமிழகத்தில் இருப்பது அதிமுக தலைமையிலான கூட்டணி இல்லை. அதிமுகவை உள்ளடக்கிய என் டி ஏ கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவின் தொகுதி பங்கீடு செய்வதற்கே டெல்லி சென்று பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய என் டி ஏகூட்டணியில் அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.

இந்தியாவை ஆண்டுவரக்கூடிய மோடி தலைமையிலான பாஜக அரசின் தொழில் வளர்ச்சி எட்டு சதவீதமாக உள்ளது. ஆனால், தமிழகத்திற்கு வரி வருவாய் தராமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய அரசின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாடு 11.8% பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டை மோடி தலைமையான அரசு எந்த வகையில் வஞ்சிக்க நினைத்தாலும் தமிழ்நாடு எந்த காலத்திலும் டெல்லிக்கு தலை வணங்காது என்ற நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்க கூடிய முதலமைச்சர், மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவது உறுதி.

எடப்பாடி பழனிசாமி யாருக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை. முதலமைச்சர் பதவி மீது உள்ள ஆசையினால் 2021 ஆம் ஆண்டு தான் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதாவால், இயற்றப்பட்ட கட்சியின் விதியை திருத்தி தன்னைத்தானே பொதுச் செயலாளர்கள் என்று அறிவித்துக் கொண்டு என்னை கட்சியில் இருந்து வெளியேற்றி அவர் துரோகம் செய்தார்.

நான், அவர் முதலமைச்சராக நான்கரை ஆண்டு காலம் தொடர்வதற்கு உதவி செய்தேன். அந்த நன்றி விசுவாசம் கூட அவருக்கு இல்லை. எடப்பாடி பழனிச்சாமி யாருக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை. என்னை இரண்டு முறை அம்மா அவர்கள் முதலமைச்சராக ஆக்கினார். ஆனால் மீண்டும் அவர் அந்த பதவிக்கு வருவதற்கு நான் எந்த இடையூறும் செய்வதற்கு விரும்பாமல் அவருக்கு முதலமைச்சர் பெயரை தந்துவிட்டு வெளியேறினேன்

அதேபோல், அம்மா இறந்தவுடன் சசிகலா அவர்கள் எனக்கு முதலமைச்சர் பதவியை தந்தார். அவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மனப்பூர்வமாக வெளியேறினேன்.

அவர் பதவி பெறுவதற்காக யார் யார் காலை அவர் ஊர்ந்து சென்று பிடித்தாரோ அவர் காலையே வாரிவிட்டு அவரையே தரக்குறைவாக பேசியவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. இதன் காரணமாகத்தான் உள்ளாட்சித் தேர்தல் சட்டமன்றத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் என்ற அவர் சந்தித்த 10 தேர்தலிலும் தோல்வி கண்டுள்ளார் .

இனி எத்தனை தேர்தலில் அவர் தன்னை முதலமைச்சர் என்று அறிவித்துக் கொண்டு நின்றாலும் அவருக்கு படு தோல்வியைத் தான் தமிழ்நாட்டு மக்கள் பரிசாக தருவார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக இரண்டாவது முறையாக ஸ்டாலின்  பதவி ஏற்பார் . அதற்கு எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் நாளன்று அதிகாலைகளில் சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்

இந்த கூட்டத்தில், முன்னாள் எம்பிக்கள் ரவீந்திரநாத்குமார், கோபாலகிருஷ்ணன். சோழவந்தான் தொகுதி பார்வையாளர் சம்பத், ஒன்றிய செயலாளர்கள், நகர் செயலாளர்கள்,  பேரூராட்சி தலைவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள்,  ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top