Close
ஏப்ரல் 24, 2026 3:57 காலை

நாமக்கல் தொகுதி வேட்பாளரை மாற்றாவிட்டால் பதவி ராஜினாமா: அதிமுக நிர்வாகிகள் அறிவிப்பு

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாமக்கல் சட்டசபை தொகுதி அதிமுக நிர்வாகிகள்

நாமக்கல் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றாவிட்டால், கட்சிப்பதவியை ராஜினாமா செய்வோம் என கட்சி நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

நாமக்கல் சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளராக ஸ்ரீதேவி எக் சென்டர் மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 2011, 2016 ஆகிய சட்டசபை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நாமக்கல் மாநகர அதிமுக செயலாளர் பாஸ்கர், 2021 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட கட்சி தலைமையிடம் அவர் வற்புறுத்தி வந்தார். மேலும், நாமக்கல் தொகுதியில் மீண்டும் தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தனது ஆதரவாளர்களுக்காக பல்வேறு கோயில்களில் கிடா விருந்து வைத்து தொண்டர்களை உற்சாகப்படுத்தி வந்தார். நாமக்கல் நகரில் தேர்தல் அலுவலகம் அமைத்துள்ளார். கடந்த ஒரு வாரமாக நாமக்கல் நகரப்பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தார். அதில் நாமக்கல் சட்டசபை தொகுதி சீட் பாஸ்கருக்கு வழங்கப்படவில்லை. மாநில வர்த்தக அணி இணை செயலாளர் ஸ்ரீதேவி எக் சென்டர் மோகனுக்கு என அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி மாலை 6 மணிக்கு, மாநில பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், நாமக்கல் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் சேகர், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர் கோபி, மோகனூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாநகரில் உள்ள 39 வார்டு செயலாளர்கள் கூடினார்கள்.

அவர்கள் நாமக்கல் சட்டசபை தொகுதி வேட்பாளர் மோகனை மாற்றம் செய்ய வேண்டும். அப்படி செயயாவிட்டால் அனைவரும் தங்கள் கட்சிப்பதவியை ராஜினாமா செய்யப்போவதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

நாளை காலை 9 மணிக்கு பாஸ்கர் ஆதரவு கட்சி நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல் நடைபெற உள்ளது. இது நாமக்கல் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top