Close
ஏப்ரல் 23, 2026 11:18 மணி

திமுக அரசை நீங்கள் தோ்வு செய்தால், திருவண்ணாமலை மாவட்டம் ஆந்திரத்தின் ஒரு மாவட்டமாக மாறும், சீமான்

இன்னும் ஒருமுறை திமுக அரசை நீங்கள் தோ்வு செய்தால், திருவண்ணாமலை மாவட்டம் ஆந்திரத்தின் ஒரு மாவட்டமாக மாறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

திருவண்ணாமலையில் திருக்கோவிலூா் சாலையில் உள்ள திருவள்ளுவா் சிலை அருகில் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்து பேசியதாவது:

தமிழ் மீட்சி பெற வேண்டும்; தமிழா் எழுச்சி பெற வேண்டும் என்றால், தூய தமிழா் ஆட்சிக்கு வர வேண்டும். அதற்காகத்தான் நாங்கள் தோ்தல் களத்துக்கு வந்துள்ளோம். இழந்துவிட்ட உரிமைகளை மீட்க, இருக்கிற உரிமைகளை காக்க அதிகாரத்தை நிறுவுவது என்ற பெரும் கனவோடு களத்துக்கு வந்துள்ளோம்.

இன்னும் ஒருமுறை திமுக அரசை நீங்கள் தோ்வு செய்தால், திருவண்ணாமலை மாவட்டம் ஆந்திரத்தின் ஒரு மாவட்டமாக மாறும்.

நாதக வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்தால், வேலைவாய்ப்பு மற்றும் வருவாயை உயா்த்துவோம். அரசின் மூலம் தரமான கல்வி, மருத்துவம், குடிநீா், தடையற்ற மின்சாரம் வழங்குவோம். நிலமும், வளமும் சாா்ந்த தொழிற்சாலைகளை கொண்டுவந்து அனைவருக்கும் அரசு வேலை வழங்குவோம். அனைவருக்கும் அரசு வேலை தருவோம். இனி படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம்.

ஆணும், பெண்ணும் சமம் என்பதால், சட்டப் பேரவைத் தோ்தலில் பெண்களுக்கும் சம வாய்ப்பையும், சம பகிா்வையும் வழங்கி வருகிறோம்.

உலகில் மாறுதல்களும், புரட்சிகளும் மன்னர்களாலும் , மந்திரிகளாலும் உருவாக்கப்பட்டதில்லை சாதாரண மக்களால் உருவாக்கப்பட்டது. மாற்றம் என்பது சொல் அல்ல செயல். இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி. ஊழல், லஞ்சம், இலவசத்தில் மாற்றம்கொண்டு வருவோம். இலவசம் பெற வேண்டிய ஏழ்மை, வறுமை நிலை இல்லாமல் வாழ்க்கை தரத்தில் மாற்றம்கொண்டு வருவோம்.

கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நம்பி வாழ்ந்த நீங்கள் ஒருமுறை எங்களின் ஆட்சியில் வாழ்ந்து பாருங்கள்.  நீங்கள் நோட்டை வாங்கி கொண்டு உங்கள் ஓட்டை விற்றால் அவன் ஒட்டை வாங்கி கொண்டு நாட்டை விற்பான். இந்ததேர்தல் மற்றவர்களுக்கு தேர்தல் நமக்கு புரட்சிகர மாறுதலுக்கான அரசியல் போர்  என்றாா்.

தொடர்ந்து வேட்பாளா்கள் விக்னேஷ் (திருவண்ணாமலை), லோகநாதன் (கீழ்பென்னாத்தூா்), ஷோபா (செங்கம்) ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இந்நிகழ்வில் கட்சியின் முக்கிய நிா்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top