தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 வரும் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் நட த்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் , திருவண்ணாமலை , கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசபாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான திருவண்ணாமலை மாநகராட்சி ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது வாக்கு இயந்திரங்கள் வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறை மற்றும் அஞ்சல் வாக்கு வைப்பறை குறித்தும், வாக்கு எண்ணும் நாளில் அலுவலர்கள், முகவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்குத் தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம் மற்றும் இதர வசதிகள் குறித்தும், தேர்தல் ஆணையத்திற்கு உடனுக்குடன் முடிவுகளைத் தெரிவிக்கத் தேவையான இணையதள வசதி மற்றும் கணினிஅறைகள் குறித்தும், வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு, சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள் குறித்தும், அவசர கால நிலையை சமாளிக்கத் தேவையான தீயணைப்பு கருவிகள் தயார் நிலையில் இருப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள பச்சையப்பாஸ் சில்க்ஸ் வளாகத்தில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ரசீதில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்களை முத்திரையிட்டு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.இராம்பிரதீபன், திருவண்ணாமலை சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுலவர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் செல்வம், மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், திருவண்ணாமலை வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.




