நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் தபால் வாக்குப்போடுவதற்காக 6 சிறப்பு மையங்கள், வரும் 15ம் தேதி மற்றும் 20ம் தேதி ஆகிய 2 நாட்கள் செயல்படும்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆத்சிஉஅர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வருகிற 23ம் தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் தங்களின் வாக்குகளை முன்கூட்டியே பதிவு செய்வதற்காக, 6 தொகுதிகளிலும் தனித்தனியே சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு வருகிற 15ம் தேதி மற்றும் 20ம் தேதி ஆகிய 2 நாட்கள் தேர்தல் பணியாளர்கள் நேரில் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். ராசிபுரம் எஸ்ஆர்வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேந்தமங்கலம் வேதலோக வித்யாலயா பள்ளி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பரமத்திவேலூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கலை அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் எஸ்எஸ்எம் லட்சுமியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 6 இடங்களில் சிறப்பு வாக்குப்பதிவு மையங்கள் அமைக்ப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் வைத்திருந்து, தங்களின் வாக்கு உள்ள சட்டசபை தொகுதி தவிர்த்து, மாவட்டத்தின் இதர சட்டசபை தொகுதியில், தேர்தல் பணிபுரிய உத்தரவு பெற்ற அலுவலர்கள் மற்றும் தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களில் வாக்குப்பதிவு வைத்திருந்து. நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அலுவலர்கள் ஆகியோர் இந்த சிறப்பு மையங்களில் தங்களது வாக்கினை செலுத்திடவேண்டும்.
வாக்குப்போட வரும் அலுவலர்கள், தேர்தல் கமிஷன் உத்தரவின்படி தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை உள்ளிட்ட புகைப்பட அடையாள ஆவணங்களை கொண்டு வர வேண்டும்.
மேற்கண்ட மையங்களில் நடைபெறும் வாக்குப்பதிவின் போது தேர்தல் கமிஷன் உத்தரவின்படி தபால் வாக்குப்பதிவு தொடர்பான நடைமுறைகளை அலுவலர்கள் பின்பற்ற வேண்டும். தேர்தல் கமிஷன் அறிவுறுத்தலின்படி தபால் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்த அலுவலர்கள் மேற்கண்ட மையத்தில் மட்டுமே வாக்களிக்க இயலும்.
அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளில் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கவோ, தபால் மூலம் அல்லது தனி நபர் மூலம் தபால் வாக்குகளை வாங்கி அனுப்ப முடியாது. மேற்படி மையத்தில் அமைக்கப்படும் வாக்கு மையத்தில், வாக்களிக்க தவறிய அலுவலர்கள் தபால் வாக்குச்சீட்டு, மற்றும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரம் ஆகிய இரண்டிலும் வாக்களிக்கும் வாய்ப்பை இழப்பார்கள்.
வாக்குப்பதிவு உள்ள சட்டமன்ற தொகுதிகளிலேயே தேர்தல் பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ள அலுவலர்களுக்கு தேர்தல் நாளன்று தாங்கள் பணிபுரியும் வாக்குச்சாவடியிலேயே தேர்தல் பணிச்சான்று மூலம் வாக்களிக்கலாம். இந்த சிறப்பு வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் உரிய அனுமதி பெற்று தங்களின் சார்பில் வாக்குப்பதிவினை கண்காணிக்க பிரதிநிதிகளை அனுப்பலாம்.
இது குறித்த விபரங்களுக்கு 800-599-4286 என்ற தொலைபேசி நம்பரை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




