நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, எம்.பி. தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதா திமுகவின் முயற்சியால் எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது என மாநிலங்களவை எம்.பி., ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
கடந்த 16ம் தேதி நாமக்கல் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள எம்.பி., தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் கருப்புக்கொடியை ஏற்றினார். பின்னர் சட்ட நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தெடார்ந்து 17ம் தேதி மத்திய அரசால் மக்களவையில் கொண்டுவரப்பட்ட மசோதா, போதிய ஆதரவு இல்லாமல் வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் அறிவித்த போராட்டம் வெற்றியடைந்ததை கொண்டாடும் வகையில், நாமக்கல் நல்லிபாளையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்த கருப்புக்கொடியை, நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார், எம்.பி., இறக்கி வைத்து, பட்டாசுகளை வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா, தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் உரிமையை பறிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு எதிராகவும், வடஇந்திய மாநிலங்களுக்கு அதிகாரக் குவியலை அதிகரிக்கும் வகையிலும், இந்த மசோதா வடிவமைக்கப்பட்டிருந்ததால் தமிழக முதல்வர் மாநிலத்தின் நலன் கருதி கடுமையாக எதிர்த்தார்.
இதையொட்டி கடந்த 16ஆம் தேதி நாமக்கல்லில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தைத் தொடங்கி வைத்ததுடன், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து இந்த மசோதாவுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை உருவாக்கினார். அதனால் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது என கூறினார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ ராமலிங்கம், மாவட்ட திமுக அவைத் தலைவர் .மணிமாறன், மாநகராட்சி மேயர் கலாநிதி, துணை மேயர் பூபதி, நகர செயலாளர்கள் ராணா ஆனந்த், சிவகுமார், மாநகராட்சி கவுன்சிலர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




