நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், கட்சியின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளராகவும், கட்சியின் அமைப்பு செயலாளராகவும் முன்னாள் அமைச்சர் தங்கமணி இருந்தார். அவர் வேலுமணி, சண்முகம் தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்து பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
மேலும், நாமக்கல் அதிமுக மாநகர செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் நாமக்கல் மாவட்ட அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. புதிதாக மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள பாஸ்கர் பங்கேற்று பேசினார்.
முன்னதாக கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் புதிய மாவட்ட செயலாளர் பாஸ்கரை வாழ்த்திப் பேசினர். முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், கலாவதி உள்பட கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதேவேளையில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்களான பரமத்தி வேலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சேகர், திருச்செங்கோடு முன்னாள் எம்எல்ஏ பொன்சரஸ்வதி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதனால் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், மாவட்ட அதிமுக அலுவலகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.




