நாமக்கல் முல்லை நகர் செல்வகணபதி கோயில் மகா கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். 25ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
நாமக்கல் மோகனூர் ரோட்டில், உள்ள முல்லை நகரில், முல்லை நகர், அன்பு நகர், பாரதி நகர் ஆகிய பகுதிகளுக்கு பாத்தியப்பட்ட செல்வகணபதி, துர்க்கை அம்மன், குரு தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், நவநாயகர்கள் மற்றும் அரச மரத்து விநாயகர் கோயில்கள் அமைந்துள்ளன.
இந்த கோயில்கள் கும்பாபிஷேக விழாவையொட்டி, இன்று 23ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றிற்கு சென்று புனித நீராடி, தீர்த்தக்குடங்களுடன் வந்தனர். நடனமாடும் குதிரைகள் முன்னே செல்ல திரளான பெண்கள் தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர்
நாளை 24ம் தேதி ஞாயிறு காலை 7 மணிக்கு மகாலட்சுமி ஹோமம் நடைபெறும். காலை 9 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் நடைபெறும். மாலை 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை நடைபெறும். மாலை 7 மணிக்கு அன்னதானம் நடைபெறும்.
25ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு 2ஆம் கால யாசாலை பூஜை நடைபெறும். காலை 6 மணிக்கு மகா பூர்ணாஹூதியுடன் யாக சாலை பூஜைகள் நிறைவுபெற்று, புனித நீர் அடங்கிய தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, செல்வகணபதி மற்றும் பரிவார ஆலயங்களின் கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைப்பார்கள்.
தொடர்ந்து செல்வகணபதி, துர்க்கை அம்மன், தட்சிணாமூர்த்தி, பால முருகன், நவநாயகர்கள், அரசமரத்து மங்கள விநாயகர் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
25ம் தேதி இரவு 7 மணிக்கு கலைமாமணி அரசு பரமேஸ்வரன் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.




