Close
ஆகஸ்ட் 21, 2026 3:34 மணி

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்:

சோலை மலை முருகன் கோவில்

அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில். சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. அதைத்தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை இங்கு குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்தது.

அதன்படி  கடந்த வருடம் பாலாலய விழாவும் நடந்தது. அதன் பிறகு திருப்பணி வேலைகள் முழு வீச்சில் நடந்து முடிந்தது. பின்னர் கடந்த மார்ச் மாதம் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைக்க முகூர்த்தக் கால் நடப்பட்டது அதன் படி பலவண்ணங்களுடன் யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த 1ம் தேதி முதல் மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் சிவாச்சார்யார்களின் வேத மந்திரங்களுடன் தொடங்கியது. பின்னர் தொடர்ந்து,  4ம் தேதி வரை 5 கால யாகசாலைபூஜைகள் நடந்து முடிந்தது.

தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை விநாயகர் பூஜையோடு நடந்தது.பின்னர் காலை 5.15 மணிக்கு மஹா பூர்ணாஹுதி நிறைவு பெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க தீவட்டி வர்ணகுடை பரிவாரங்களுடன் தீர்த்த குடங்கள் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி சன்னதி, வித்தக விநாயகர், ஆதிவேல் சன்னதி விமானம் மற்றும் ராஜ கோபுரத்தில் உள்ளகோபுர கலசங்களில் குடம் குடமாக புனித தீர்த்தம் 5.55 மணிக்கு ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேக விழா கோலகலமாக நடந்தது.

இந்த விழாவில் பக்தர்கள் மீது அதற்கான கருவி மூலம் புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டு பூஜை மலர்களும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்களும் மகா தீபாராணைகளும் நடந்தது.

இந்த விழாவையொட்டி மதுரை திண்டுக்கல் சிவகங்கை, தேனி, சென்னை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் லட்சம் பக்தர்களுக்கு மேல் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவில், எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் கோவில் அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . இந்த விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஹரிஹரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் உள்பட 600 போலீசார்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top