தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறந்து, பொதுமக்களுக்கு ஆன்லைன் முறையில் நேரடியாக மணல் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மணல் லாரி சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சம்மேளன செயலாளர் ரவிகுமார், பொருளாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சம்மேளன மாநில தலைவர் செல்ல ராஜாமணி கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்கனவே நடைபெற்ற ஆட்சியில், மணல் குவாரிகளில் முறைகேடாக அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மணல் எடுத்ததாக மத்திய அமலாக்க துறை சோதனை செய்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகம் முழுவம் மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. மணல் குவாரிகள் செயல்படாததால் இந்த லாரிகளை ஓட்ட முடியாமல் உரிமையாளர்களும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து தமிழகம் முழுவதும் காவிரி ஆறு, பாலாறு உள்ளிட்ட ஆறுகளை ஆய்வு செய்து எங்கெங்கு மணல் திட்டுகள் அதிக அளவில் தேங்கியுள்ளதோ அந்த பகுதிகளை கண்டறிந்து, அரசு மணல் குவாரிகளை துவக்கி முறைகேடின்றி, ஆன்லைன் பதிவு மூலம் நேரடியாக பொதுமக்களுக்கு மணல் வழங்க வேண்டும்.
அதேபோன்று கட்டுமானத்திற்கு தேவையான கிராவல் மண், சவுடு மண் ஆகியவை தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.சேண்ட், பி.சேண்ட் ஆகிவற்றிற்கு தரக்கட்டுப்பாடு ஏற்படுத்தி, மாவட்டம் தோறும் அரசு டிப்போக்கள் அமைத்து, தரமான எம்சேண்டை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும்.
மேலும் சாலை விபத்துகளை தடுத்து நிறுத்த, லாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் பாரம் ஏற்றுவதை தடை செய்ய வேண்டும். கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு தினசரி ஆயிரக்கணக்கான லாரிகளில் அளவுக்கு அதிகமான மணல் மற்றும் கனிமங்கள் போலி அனுமதி சீட்டு கொடுத்து அனுப்பப்பட்டு வருகிறது.
தமிழக அரசு முதலில் அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் எம்.சேண்ட், பி.சேண்ட், கிராவல் மண் குவாரிகளை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் அரசே நேரடியாக மணல், எம்.சேண்ட், ஜல்லிகள் போன்ற கனிமத்தை விற்பனை செய்தால், பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி கனிமங்கள் கிடைக்கும். அதே நேரத்தில் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 50 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும் என அவர் கூறினார்.




