Close
ஏப்ரல் 23, 2026 6:30 மணி

தேர்தல் பணி அதிகாரிகளுக்கு தனியார் வாகனங்கள்: ஆட்சியரிடம் டாக்சி டிரைவர்கள் முறையீடு

தேர்தல் பணி அதிகாரிகள் தனியார் வாகனங்கள் பயன்படுத்துவதாக, டாக்சி டிரைவர்கள், நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தேர்தல் பணிகளில் சட்ட விரோதமாக தனியார் வாகனங்கள் பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி டூரிஸ்ட் வாகன டிரைவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.

இது குறித்து, பத்து ரூபாய் இயக்கம் மற்றும் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தியிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு சட்டசபை தேர்தல், பணிகளுக்காக, நாமக்கல் மாவட்டத்தில் மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக, விதிகளை மீறி தனியார் கார்களை தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. தனியார் வாகனங்களை வாடகை மற்றும் பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவது மோட்டார் வாகன சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே தனியார் வாகனங்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், தனியார் வாகனங்களை பயன்படுத்தி தேர்தல் பணிகளில் ஈடுபடும் போது விபத்து ஏற்பட்டு விபரீதம் நடந்தால், மோட்டார் வாகன இன்சூரன்ஸ் நிறுவனங்கள் எந்தவித இழப்பீடும் தராது.

இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் குடும்பத்தார்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். நாமக்கல் மாவட்டத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய அலுவலர்களே விதிகளை மீறி செயல்படுவது மிகவும் தவறானதாகும்.

மேலும் இதுபோல தனியார் வாகனங்களை பயன்படுத்துவதால் வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் தேர்தல் பணிகளில் பயன்படுத்தப்படும் தனியார் வாகனங்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பிரமுகர்களுக்கு வேண்டியவர்களின் வாகனம் என்பதும் தெரியவந்துள்ளது.

எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தனியார் வாகனங்களை தேர்தல் பணிகளில் இருந்து அகற்றி, அரசு வாகனங்கள் அல்லது வாடகை வாகனங்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பத்து ரூபாய் இயக்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் நல்வினை விஸ்வராஜ், மாநில செயலாளர் வக்கீல்சதீஷ்குமார், சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் சங்க மாநில தலைவர் பத்மராஜ் மாநில தலைவர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் துரைராஜ் உள்ளிட்ட பலர் மனு அளித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top