அக்கலாம்பட்டி கல் குவாரியை மூடக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்ததால், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கலாம்பட்டி கிராமத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியின் அருகே குடியிருப்புகள் இருப்பதால் குவாரியை மூட வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இச்சூழலில் நேற்று அக்கலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி குவாரி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
அப்போது அங்கு வந்த திருச்செங்கோடு ஆர்டிஓ லெனின் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது ஆட்சியர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.




