தமிழகத்தில் லஞ்சத்தை தவிர்க்க, பத்திரப்பதிவு நடைமுறைகளை எளிதாக்கி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என முதல்வருக்கு ஆவண எழுத்தர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஆவண எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் ரவிச்சந்திரன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது;
தமிழ்நாட்டில் ஊழலற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான ஆட்சியை வழங்கத் துடிக்கும் புதிய அரசுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த முயற்சிக்குத் தோள் கொடுக்க, தமிழகத்தில் உள்ள ஆவண எழுத்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம்.
பொதுமக்களிடம் இருந்து அரசு நிர்ணயித்துள்ள நியாயமான கட்டணத்தை தவிர, எந்தவிதமான லஞ்சமும் பெறாமல், ஆவண எழுத்துப் பணியை மிகச் சிறப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் செய்ய நாங்கள் உறுதியேற்கிறோம். லஞ்சமில்லாமல் நேர்வழியில் பணியாற்ற நாங்கள் தயார். நாங்கள் நேர்மையாகச் செயல்பட விரும்பினாலும், கள நிலவரம் எங்களுக்குப் பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.
சில சார்பதிவாளர் அலுவலகங்களில், அதிகாரிகளுக்குச் சேர வேண்டிய சட்டவிரோத மாமூல் தராவிட்டால், முறையாக எழுதப்பட்ட பத்திரங்களில் கூட வேண்டுமென்றே ஏதாவது ஒரு குறைபாட்டைக் கண்டுபிடித்து, பத்திரப் பதிவை இழுத்தடிக்கிறார்கள். இதனால் நிலம் வாங்கும், விற்கும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் ஆவண எழுத்தர்களின் மீதான நம்பிக்கையும், நம்பகத்தன்மையும் பாதிக்கிறது.
அரசு அதிகாரிகள் தங்களின் சுயலாபத்திற்காக வேண்டுமென்றே பத்திரங்களை முடக்குவதைத் தடுக்க, அரசு ஒரு தெளிவான வழிகாட்டு நெறிமுறையை வகுக்க வேண்டும். ஒரு ஆவணம் எந்தெந்த விதிகளுக்கு உட்பட்டு, எப்படி இருந்தால் அதனை உடனடியாகப் பதிவு செய்யலாம் என்ற வெளிப்படையான நெறிமுறையை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
ஆன்லைன் முறையிலோ அல்லது பதிவாளர் அலுவலக அறிவிப்புப் பலகையிலோ இந்த விதிகள் தெளிவாக அறிவித்தால், அதிகாரிகள் தன்னிச்சையாகக் குறை கூறி பத்திரங்களை நிராகரிக்க முடியாது.
இந்த நெறிமுறையை அரசு வகுத்துக் கொடுத்தால், நாங்கள் எந்தச் சூழ்நிலையிலும் லஞ்சத்திற்குத் துணை போகாமல், அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மிகத் தூய்மையாகப் பணிகளை செய்யக் காத்திருக்கிறோம்.
பொதுமக்களின் நலன் காக்கவும், புதிய அரசின் ஊழலற்ற ஆட்சித் திட்டத்திற்கு வலு சேர்க்கவும் இக்கோரிக்கையை தமிழக முதல்வர் கனிவோடு பரிசீலித்து, உரிய வெளிப்படையான நெறிமுறைகளை வகுத்து அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.




