எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 70ம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கடந்த 11.06.1956 அன்று துவக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டு, படிப்படியாக தரம் உயர்த்தப்பட்டு தற்போது, மேல்நிலைப் பள்ளியாக செயல்பட்டு, எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு 70 ஆண்டு காலமாக கல்வி கற்பித்து வருகிறது.
பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக 70 ஆம் ஆண்டு தொடக்க விழா பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ரஹிதா சுல்தானா தலைமை வகித்தார். முன்னாள் மாணவர் சங்கத்தின் செயலாளர் மோகனச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பழனியாண்டி, முன்னாள் மாணவர்கள் செந்தில், ஐயப்பன், ராமஜெயம், முத்து பூசாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஓய்வு பெற்ற முதன்மைக் கல்வி அலுவலராக, பள்ளி தலைமை ஆசிரியர்களாக, கல்லூரி தாளாளராக, தொழில் அதிபர்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்த விழாவில் பள்ளி ஆசிரியர்கள் செந்தில்குமார் ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரசேகரன், செந்தில் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.




