Close
ஜூன் 30, 2026 12:47 காலை

கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு கொமதேக கோரிக்கை

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன்

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என கொமதேக பொது செயலாளர் ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:மேற்கு ஆசியாவில் போர் சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 138 அமெரிக்க டாலராக உயர்ந்தது. அப்போது இந்திய தலைநகர் டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ. 94.77 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 87.67 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 70.71 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது.

இவ்வாறு இருக்கும் நிலையில் இன்று தலைநகர் டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 102.12 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 95.20 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இது மட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தபோது வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை இரண்டரை மடங்குக்கு மேல் உயர்த்தப்பட்டது.

இப்போது நிலைமை சீரான நிலையில் விலை குறைப்பு பற்றி எவ்வித அறிவிப்பும் இல்லாததால், வணிக நிறுவனங்களும், பொதுமக்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவில் லாபம் சம்பாதிக்கின்றன.

எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதுடன், எல்பிஜி வணிகப் பயன்பாடு மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் சிலிண்டர் விலையையும் உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top