Close
ஜூலை 14, 2026 10:17 காலை

நாமக்கல் பகுதியில் கூடுதல் கட்டணம்: 10 தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை

நாமக்கல் பகுதியில் கூடுதல் கட்டணம் வசூலித்த 10 தனியார் மீது வட்டார போக்குவரத்து  அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாமக்கல்லில் இருந்து சேலம், ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் பேருந்துகளிலும், உள்ளூர் தனியார் நகர பேருந்துகளிலும், அரசு அறிவித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து, கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார். எனினும் சில தனியார் பேருந்துகளில் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவதாக மீண்டும் புகார் எழுந்தது.

இதையடுத்து கலெக்டர் உத்திரவின் பேரில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நாமக்கல்லில் இருந்து இயக்கப்படும் தனியார் வெளியூர் பேருந்துகள் மற்றும் டவுன் பேருந்துகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 10 தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் சம்மந்தப்பட்ட தனியார் பேருந்துகள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்வார் என தெரிகிறது. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். அப்போது பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top