Close
ஜூலை 23, 2026 1:54 காலை

கொடியேற்றத்துடன் தொடங்கிய அழகர் கோவில் ஆடி திருவிழா

திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றி புகழ்ந்து அழைக்கப்படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோவில் ஆகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பிரமோற்சவம் என்னும் ஆடி பெருந்திருவிழா மிகவும் பிரசித்தியும் பெருமையும் பெற்றதாகும்.

அதன்படி  காலை கொடி பட்டம் பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவில் வழியாக சென்றுவந்தது பின்னர், இந்த திருவிழா காலை 8.35 மணிக்கு மங்கள இசை முழங்க கோவில் யானை சுந்தரவல்லி பிளிற பட்டர்களின் வேத மந்திரங்களோடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதில் தங்க கொடிமரத்தில் கருட பகவான் உருவம் பதிக்கப்பட்ட கொடியோடு மாவிலை, நாணல் புல் மலர் மாலைகள் புத்தாடைகள் இணைக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கள்ளழகர் பெருமாள் ஸ்ரீதேவி பூமி தேவியருக்கு சிறப்பு பூஜைகள் நூபுர கங்கை தீர்த்தத்தால் அபிஷேகமும் மஹா தீபாராதனைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, திருத்தேருக்கு அருகில் முகூர்த்தக்கால் நடும் விழாவும் நடந்தது. இன்று 22ம் தேதி இரவு சிம்மவாகனத்தில்புறப்பாடு. 23ம்  தேதி அனுமார் வாகனத்தில் பெருமாள் புறப்பாடு. 24ம் தேதி இரவு கருட வாகனப் புறப்பாடு. 25ம் தேதி காலையில் கள்ளழகர் பெருமாள் தங்க பல்லக்கில் புறப்பாடாகி மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது. அன்று இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.

26ம் தேதி இரவு யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு. 27ம் தேதி இரவு புஷ்ப சப்பரம். 28ம் தேதி காலையில் தங்கப் பல்லக்கு விழாவும் இரவு குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 29ம் தேதி காலையில் 7.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடைபெறும். அன்றிரவு பூச்சப்பரம், பதினெட்டாம்படி திருநிலை கதவுகளுக்கு சந்தனம் சாத்து படி நடைபெறும்.

30ம் தேதி தீர்த்தவாரி, 31ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி ஆடி அமாவாசை அன்று இரவு கருட வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளுவார் இதனைக் காண சுற்றுவட்டார வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்வார்கள்.

இந்த திருவிழா ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் ஹரிஹரன் மற்றும் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top