உயர் அதிகாரிகள் ஒருமையில் பேசியதால், மனமுடைந்து அங்கன்வாடி உதவியாளர் அரளி விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சிசெய்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வீடியோ வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே செவ்வந்திப்பட்டியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் அங்கன்வாடி உதவியாளராக வெண்ணிலா என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் இன்று காலை அங்கன்வாடி மையத்தில் திடீரென அரளி விதைகளை சாப்பிட்டு விட்டு 9 நிமிட வீடியோ ஒன்றை செல்ஃபியாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வணக்கம் என கூறிய அவர், தான் குறைந்த சம்பளத்தில் 9 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றேன். செவ்வந்திப்பட்டியில் பணிபுரிந்து வரும் நான் சின்னப்பம்பட்டி அங்கன்வாடி மையத்திற்கு சாப்பாடு கொண்டு செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர் ஆனால் பணி சுமைக்காரணமாகவும், உடல்நிலைக் காரணமாகவும் என்னால் முடியவில்லை என கூறினேன்.
இதனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக சாப்பாடு சரியில்லை, சுத்தமாக இல்லை, குழந்தைகளை சரியாக பார்ப்பதில்லை என அதிகாரிகள் குறைசொல்லி வந்தனர். இந்த நிலையில் திட்ட அலுவலர் ஆய்வுக்கு வந்த போது தன்னைப்பற்றி குறைச்சொல்லியும், ஒருமையில் பேசியதாகவும் வீடியோவில் பேசிய வெண்ணிலா தான் குழந்தைகளை நன்றாக கவனிப்பதாகவும், சுவையான சாப்பாடு செய்வதாகவும் கூறினார்.
மேலும், குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வரும் நாங்கள், தேர்தல் நேரத்தில் தங்களுக்கு தான் வாக்களித்தோம், சி.எம்.மாக விஜய் வந்தால் சம்பளத்தை உயர்த்தி வழங்குவார் என்று நம்பியிருந்தோம். நீங்கள் தான் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என அந்த வீடியோவில் கூறியிருந்தார்.

முன்னதாக வீடியோ வெளியிடுவதற்கு முன்பு அங்கன்வாடி உதவியாளர் வெண்ணிலா விஷச்செடியான அரளி விதைகளை இடித்து சாப்பிட்டு விட்டு பேசிய பிறகு மயங்கிய நிலையில் அங்கன்வாடி மையத்தில் கிடந்துள்ளார்.
வெண்ணிலா மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
வாழ்வில் எங்கு எத்தகைய சோதனைகள் வந்தாலும் தற்கொலை ஒருபோதும் தீர்வு ஆகாது; மனம் தளர்ந்து போகும் போது உரியவர்களிடம் பேசி, முறையான உதவிகளைப் பெறுவது அவசியமாகும்.
உங்கள் கவலைகளை நம்பிக்கையான நண்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் வெளிப்படையாகப் பேசுங்கள்.தனிமையைத் தவிர்த்து, உங்களுக்குப் பிடித்த நல்ல செயல்களில் கவனத்தைச் செலுத்துங்கள்.அவசர உதவிகள் தேவைப்பட்டால் தயங்காமல் மனநல மருத்துவர்கள் அல்லது உளவியல் ஆலோசகர்களை அணுகவும்.
- இந்தியாவில் மனநல உதவிக்கு 14416 அல்லது 104 என்ற இலவச தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
- சிநேகா (Sneha Suicide Prevention Helpline) – 044-24640050




