Close
ஆகஸ்ட் 7, 2026 11:50 காலை

பிரசாந்த் கிஷோர் வெற்றி: அரசியலில் புதிய விடியலுக்கான அறிகுறி

பீகாரின் பங்கிபூர் சட்டப்பேரவைத் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் பெற்ற வெற்றி, பீகார் மக்களுக்கு மட்டுமல்லாது, வழக்கமான பாரம்பரியக் கட்சிகளின் ஊழல் மற்றும் பிளவுபடுத்தும் அரசியலால் சலிப்படைந்த அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது.

ஜன் சுராஜ் போன்ற புதிய அரசியல் கட்சிகள் எந்தவொரு குறிப்பிட்ட சாதி அல்லது மத அடையாளமும் இல்லாத வாக்காளர்கள் அனைவரும் ஒரே ஒரு எதிர்பார்ப்பில் ஒன்றிணைய முடியும் என்பதைக் நிரூபித்துள்ளன.

பிரசாந்த் கிஷோர் பங்கிபூரில் வெற்றி பெற்றதன் மூலம், ஒரு முன்னணி தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்தவர் முதன்முறையாக ஒரு தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் செல்கிறார். கடந்த ஆண்டு பீகார் மாநிலத் தேர்தலில் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாத பின்னடைவுக்குப் பிறகு, ஜன் சுராஜ் கட்சிக்குக் கிடைத்த முதல் எம்.எல்.ஏ தொகுதி இதுவாகும்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாரதிய ஜனதா கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட பாட்னாவின் பங்கிபூர் தொகுதியில் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதே வேளையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒரே அடியில், பீகார் அரசியலை பல தலைமுறைகளாக ஆதிக்கம் செலுத்திய இரு துருவங்களையும் பிரசாந்த் கிஷோர் தகர்த்தெறிந்துள்ளார்.

நகர்ப்புற இடைத்தேர்தல் முடிவை வைத்து கிராமப்புற பீகாரின் ஒட்டுமொத்தப் போக்கைக் கணிக்க முடியாது என்றும், பங்கிபூர் என்பது படித்த, நடுத்தர வர்க்கம் நிறைந்த ஒரு விதிவிலக்கான தொகுதி என்றும் விமர்சகர்கள் கூறலாம். இருப்பினும், அரசியல் மாற்றம் எங்கு தொடங்குகிறது என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன.

பங்கிபூர் வெற்றியைச் “சாதியற்ற அரசியல்” என்று சொல்வதை விட, சாதி மட்டுமே வாக்காளர்களின் தேர்வாக அல்லது சிந்தனையாக இருக்க வேண்டியதில்லை என்ற நிலை உருவாவதைக் காட்டுகிறது.

இந்துத்துவா + நலத்திட்டங்களை முன்வைத்த என்.டி.ஏ ஒருபுறம்; மண்டல் கோட்பாடு மற்றும் சமூக நீதியை முன்வைத்த ஆர்.ஜே.டி மறுபுறம்.

இவற்றை தவிர்த்து மூன்றாவது வழியாக வளர்ச்சி, வேலைவாய்ப்பு, கல்வி, தரமான அரசுச் சேவைகள் மற்றும் புலம்பெயர்தலைத் தடுத்தல் ஆகிய பொதுப் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட பொதுக் குறைந்தபட்சத் திட்ட அரசியல்.

ஒரு நல்ல அரசுப் பள்ளியைக் கேட்க ஒரு இந்துவும் முஸ்லிமும் ஒரே சித்தாந்தத்தைப் பகிர்ந்து கொள்ளத் தேவையில்லை. அதேபோல, வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு தாமதங்களை எதிர்க்க பூமிஹார் மற்றும் தலித் குடும்பங்கள் தங்கள் அடையாளங்களை விட்டுக்கொடுக்கத் தேவையில்லை. பொது நிறுவனங்கள் அனைவருக்கும் சமமான குடியுரிமை உரிமைகளை வழங்குகின்றன.

டில்லியில் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திலிருந்து ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி,  தமிழ்நாட்டின் பாரம்பரிய இருதுருவ அரசியலை உடைத்து மாபெரும் அறிமுகத்தை ஏற்படுத்திய விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆகியவை வரிசையில் தற்போது ஜன் சுராஜும் இணைந்துள்ளது.

பாரம்பரிய அரசியல் கட்சிகள் புதிய தலைமை உருவாகும் வழிகளை அடைத்து வைத்திருப்பதாலேயே இத்தகைய ‘பொலிட்டிக்கல் ஸ்டார்ட்-அப்’கள் வெற்றி பெறுகின்றன:

பாஜக கடுமையான சித்தாந்த மற்றும் அமைப்புக் கட்டுப்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. காங்கிரஸ் பலவீனமான உள்ளூர் அமைப்புகளால் முடங்கியுள்ளது. பிராந்தியக் கட்சிகள் பெரும்பாலும் குடும்பக் கட்டுப்பாட்டிலும், பழைய சாதிச் சேர்க்கைகளிலுமே இயங்குகின்றன.

இணையத்தில் தீவிரமாக இயங்கும், வேலைவாய்ப்பின்மையால் கொதித்தெழும் லட்சக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு இந்த முடக்கப்பட்ட அரசியல் அமைப்பில் எந்த வழியும் தெரிவதில்லை. அவர்களின் கோபத்தை ஒரு வலுவான அமைப்பாக மாற்றி, வாக்குகளாக மாற்றும் புதிய கட்சிகளை வாக்காளர்கள் வரவேற்கத் தொடங்கியுள்ளனர்.

புதிய அரசியல் கட்சிகளில் ஆபத்துகளும் உள்ளன. அவை தனிநபர் வழிபாட்டு அமைப்பாகவோ அல்லது உட்கட்சி ஜனநாயகம் இல்லாத கார்ப்பரேட் நிறுவனங்களைப் போலவோ மாறக்கூடும்.

ஒரு நகர்ப்புற இடைத்தேர்தலில் வெல்வது எளிது; ஆனால் கிராமப்புறங்கள் முழுவதும் நிலையான அமைப்பைக் கட்டுவது கடினம். பிரசாந்த் கிஷோரின் தற்போதைய சவால், வெறும் ‘பிரசாந்த் கிஷோர்’ என்ற பிம்பத்தை மட்டும் நம்பியிருக்காமல், அடுத்த தலைமுறை உள்ளூர் தலைவர்களை உருவாக்குவதே ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top