முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஆண்டுதோறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
மாவட்ட, மண்டல, மாநில அளவில் இப்போட்டிகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து உரிய அங்கீகாரம் வழங்கப்படும்.
வருகின்ற செப். 4ம் தேதி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் துவங்குகிறது. இந்த போட்டியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 35 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு வில்வித்தை, வுசு, துப்பாக்கி சுடுதல், யோகா, மல்லர் கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீர் விளையாட்டுக்களான கயாகிங், கோனோயிங், போன்ற விளையாட்டுக்களும் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 விளையாட்டுக்கள் இடம்பெறுகின்றன.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் வருகிற 31ம் தேதி மாலை 6 மணிவரை tncmtrophy.sdat.in என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
இந்த போட்டிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர், இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை 2ம் ஆண்டு வரை படிக்கும் மாணவ மாணவியர், 15 முதல் 35 வயதுள்ள பொது பிரிவினர் மற்றும் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள், அரசு பணியாளர்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.
மாவட்ட மற்றும் மண்டல அளவில் வெற்றிபெறுபவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




