Close
ஆகஸ்ட் 19, 2026 9:08 மணி

‘காஃபி வித் கலெக்டர்‘: நாமக்கல்லில் மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற, ‘காஃபி வித் கலெக்டர்‘ நிகழ்ச்சியில் கலெக்டர் மதுபாலன், அரசு மாதிரிப்பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

நாமக்கல்லில் புதுமையான முறையில், நடைபெற்ற காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில், அரசு மாதிரி பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதன் முறையாக அரசு மாதிரி பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு காபி வித் கலெக்டர் என்ற பெயரில் மாவட்ட ஆட்சியருடன் தேநீர் விருந்து நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்  மதுபாலன் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில், கடந்த ஜூலை மாதம், மாணவர் பேரவை தேர்தல் நடந்தது. கல்வி மட்டுமல்லாது, கலைகளை மாணவர்களிடையே ஊக்குவித்தல், துறை சார்ந்த பயிற்சிகள், புத்தக வாசிப்பு, வானியல் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள், மாணவர்களின் மேற்படிப்புகளுக்கு, உயர்தர கல்லூரிகளுக்கு செல்வதற்கான பயிற்சி என, ஒரு மாணவனின் முழுமையான வளர்ச்சிக்கு இக்குழு இயங்கி வருகிறது.

வெறும் மனப்பாடம் மற்றும் மதிப்பெண்களை மட்டுமே சார்ந்திராமல், வாழ்க்கையின் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளவும், அனைத்துத் துறைகளிலும் சமநிலையான வெற்றியை அடையவும், இந்த முழுமையான அணுகுமுறை உதவுகிறது.

மாநிலத்தில் நடக்கும் தேர்தல் முறையைப் போலவே, பள்ளியிலும் மாணவர் பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் மாணவர்களே பிரதிநிதிகளாக செயல்படுவர். மாநில அளவில் சட்டசபை தேர்தலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், நகரப்பகுதிக்கு தனியான தேர்தல்கள், ஊரகப் பகுதி என்றால், கிராமப்புற பகுதிகளுக்கு தனி தேர்தல்கள் இருக்கிறது.

இதுபோல், மூன்று வகையான தேர்தல்கள் வழக்கமாக நடந்து வருகிறது. அதுமட்டும் இன்றி, 5 ஆண்டுக்கு ஒருமுறை மக்களவை தேர்தலும் நடக்கிறது. ஆகவே, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நமது மாநிலத்தில் தேர்தல் என்பது மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும்.

மாணவர் மன்றத்தின் மூலம், உங்களுக்கு தேர்தல் குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். விரைவில் உங்களுக்கான வாக்குரிமை வர இருக்கிறது. 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்களிக்கலாம். உங்களுக்கான வாக்குரிமை வரும்போது, நீங்கள் அதனை முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே, சரியாக வாக்களிக்க முடியும்.

அதனால், உங்களுக்கு முழுமையான புரிதல் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், மாதிரி பள்ளிகளில் மாணவர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது. என அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள்  கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top