கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நல வாரிய வெப்சைட்டில் தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை களைந்து, அவர்களது வாழ்வாதாரத்திற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவி குழுக்கள் அமைப்பது, தொழில் பயிற்சிகள் வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்கு, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் நலவாரியம் கடந்த 2022ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கைம்பெண்கள் மற்றும் ஆதவற்றோர் நலவாரியத்திற்கென தனியே வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெப்சைட் பக்கத்தில் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற நலவாரியத்திற்கென, தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடம் இருந்து எளிய முறையில் பெற தங்களது விவரங்களை வெப்சைட்டில் பதிவு செய்து உறுப்பினராகலாம்.
உறுப்பினராக பதிவு செய்தவர்களுக்கு, சமூக நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஓய்வூதியம், தற்காலிக தங்குமிடம், திறன்வளர்ப்பு பயிற்சி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உதவிகள் மற்றும் சுயதொழில் செய்ய மானியம் ரூ. 50 ஆயிரம் உள்ளிட்ட உதவிகளை எளிதாக பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




