திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக புதியதாக பொறுப்பேற்று முதல் முறையாக ஆரணிக்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் புத்திர காமேட்டிஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்து வழிபட்டு ஆலய புனரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து காய்கறி மார்க்கெட் அருகே கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை பார்வையிட்டு பணிகளின் தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். பின்னர் ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்காக உணவு தயாரிப்பு முறை மற்றும் தரத்தினை ஆய்வு செய்தார். ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புனலப்பாடி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டாா்.
இனையடுத்து ஆரணி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் சிகிச்சை முறையாக வழங்கப்படுகிறது மருத்துவர்கள் செயல்பாடு உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் ரூ 5.80 இலட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராத புதிய மகப்பேறு கட்டடத்தை பார்வையிட்டு ஏன் பயன்பாட்டிற்கு வரவில்லை என்று மருத்துவ அலுவலரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இதே போல ஆரணி வட்டாரத்தில் உள்ள பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஆற்காடு விழுப்புரம் சாலை – இரும்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலை பணியினைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
ஆரணி வட்டத்திற்குட்பட்ட ச.வி.நகரத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் விபி ஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணையில் ஆய்வு மேற்கொண்டாா்.
இந்த ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் சிவா, நகராட்சி ஆணையர் வேலவன், வட்டாட்சியர் அகத்தீஸ்வரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




