சோழவந்தான் அருகே வட்ட பிள்ளையார் கோவில் பகுதியில் கருப்பட்டி செல்வதற்காக 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்துக்காக காத்திருந்தனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருப்பட்டி செல்லக்கூடிய 63 ஆம் எண்கொண்ட பேருந்து சோழவந்தான் பேருந்து நிலையம் செல்லாமல், வட்ட பிள்ளையார் கோவில் வழியாக கருப்பட்டி சென்று விடுவதாக கூறி பயணிகள் வட்ட பிள்ளையார் கோவிலில் காத்திருந்தனர்.
இந்த நிலையில், வட்ட பிள்ளையார் கோவில் வந்த பேருந்து கருப்பட்டி செல்லாமல் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்காக திரும்பியது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட பயணிகள் பேருந்து ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
இலவச பேருந்துகள் இயக்குவதால் பெண்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை. பேருந்து நிறுத்தத்தை தாண்டி பேருந்தை நிறுத்துவதால் ஓடி சென்று பேருந்தில் ஏற வேண்டிய நிலை உள்ளது. மேலும், பாதி வழியில் பேருந்தை திருப்பி போக்குவரத்து பணி மனைக்கு சென்று விடுகிறார்கள். இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
ஆகையால், இலவச பேருந்துகளை நிறுத்திவிட்டு கட்டண பேருந்துகளை அனுப்பினால் கூட போதும் என்று பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் கூறினார்கள்.
மேலும், பேருந்திலும் இலவச பேருந்து டிக்கெட் கொடுத்து விட்டு பணத்தை கேட்பதாகவும் குற்றம் சாட்டினர். தொடர்ச்சியாக, கருப்பட்டி இரும்பாடி பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்து சோழவந்தான் வரை மட்டுமே வந்து செல்வதாகவும் இதன் காரணமாக தினசரி வட்ட பிள்ளையார் கோவிலில் கருப்பட்டி இரும்பாடி செல்லக்கூடிய பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறினார்கள்.
ஆகையால், அரசு கட்டண பேருந்துகளை குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி பயணிகளின் சிரமத்தை குறைக்க வேண்டும் தனியார் பேருந்திலாவது உரிய மரியாதை உள்ளது அரசு பேருந்தில் எந்த மரியாதையும் இல்லை என விரக்தியுடன் கூறினார்கள். சோழவந்தான் பகுதிக்கு முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




