Close
செப்டம்பர் 17, 2026 2:58 மணி

நாமக்கல் அருகே ஜீப்பும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு: 4 பேர் காயம்

நாமக்கல் அருகே அதிகாலையில், காரும், ஜீப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சேலம் & கரூர் பைபாஸ் ரோட்டில், இன்று 16ம் தேதி அதிகாலை 4.30 மணியளவில், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி, மோலையப்பட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்களது காரில், பெங்களூரில் இருந்து சொந்த ஊரான கரூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, திருச்செந்தூர் சென்று விட்டு பெங்களூர் நோக்கிச் திரும்பிச் சென்ற ஜீப் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பை தாண்டி, எதிர்புறத்தில் சென்ற அவர்களின் கார் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த, காரை ஓட்டி வந்த கார்த்திக்குமார் (35), அவரது தந்தை செல்வராஜ்(60), தாய் காந்திமதி (55) ஆகிய 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.

எதிரே ஜீப்பை ஓட்டி வந்த கிசான் கவுடா (19) என்பவர் படுகாயமடைந்து, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். அந்த ஜீப்பில் வந்த, பெங்களூரைச் சேர்ந்த யாதுநந்தன் (19), சிவகுமார் (32), சிவகுமாரின் மனைவி கவுதமி (30) ஆகிய 3 பேர் காயமடைந்து, நாமக்கல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top