Close
மே 20, 2024 9:39 மணி

அரிமளம் பகுதியில் நெல் பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை யோசனை

புதுக்கோட்டை

திருமயம் தாலுகாவில் நெல் பயிரில் குலை நோய் தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், அரிமளம் ஒன்றியப்பகுதியில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்தும்வழி முறைகள் குறித்து வேளாண்துறை தெரிவித்துள்ளது.

அரிமளம் வட்டார வேளாண்உதவி இயக்குனர் பாண்டி வெளியிட்டுள்ள தகவல்: அரிமளம் வட்டாரத்தில் ஏம்பல், இரும்பநாடு, திருவாக்குடி கிராமங்களில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்துள்ள பயிரில் குறிப்பாக சம்பா மசூரி இரகத்தில் குலைநோய் அறிகுறி தென்படுகிறது.

இந்த நோயை உரிய ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளை கடைபிடித்து கட்டுப்படுத்தி சேதங்களை தவிர்க்கலாம்.குலைநோய் தாக்குதலின் அறிகுறிகள்: இலையின் மேல் பகுதியில் அளவில் சிறிய பசுமை கலந்த நீல நிறப்புள்ளிகள் உருவாகும். பின்பு புள்ளிகள் பெரிதாகும் போது இரண்டு பக்க நுனிகளும் விரிவடைந்து நடுப்பகுதியில் அகலமாகவும், முனைகள் கூராகவும் காணப்படும்.

இது பார்ப்பதற்கு நமது கண் வடிவத்தை ஒத்திருக்கும் இந்த கண் வடிவ புள்ளிகளின் ஓரங்கள் கரும்பழுப்பு நிறத்திலும், உட்பகுதி இளம் பச்சை அல்லது சாம்பல் நிறத்திலும் இருக்கும். தாக்குதல் அதிகமாகும் போது இலையில் காணப்படும்  புள்ளிகள் ஒன்று சேர்வதால் இலைகள் காய்ந்து தீய்ந்தது போல் காணப்படும். குலை நோய் தாக்குதலால் 30 முதல் 60 சதவீதம் விளைச்சல் பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போது நிலவும் தட்ப வெப்ப நிலையின் காரணமாக, இந்தப் புள்ளிகள் இலைகள், பால் பருவம் மற்றும் நெல்மணிகள்  முற்றும் நிலையில் உள்ள கதிர்களின் கழுத்து பகுதிகளில் புள்ளிகள் ஏற்பட்டு கதிர் ஒடிந்து விழும். இந்தநோய் காற்று, விதை மற்றும் நோயுற்ற வைக்கோல் மூலம் பரவும் தன்மை கொண்டது. இரவு நேரத்தில் 20 டிகிரிக்கு குறைவான வெப்பநிலை, அதிக நேரப்பனிப்பொழிவு 85 முதல் 90 சதவீதம் ஆகிய காரணிகள் இந்த நோய் பரவ காரணமாக உள்ளது.

இந்நோயை கட்டுப்படுத்த முதலில் வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸ் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும் டிகே.ம்-13,ஆடுதுறை 54 போன்ற குலைநோய்க்கு எதிர்ப்பு திறன் கொண்ட நெல் இரகங்களை பயிர் செய்ய வேண்டும்.

சூடோமோனஸ் புளோரோசனிஸ் ஏக்கருக்கு 1 கிலோ வீதம் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். தாக்குதல் அறிகுறி அதிகமாகும் போது ஒரு ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 120 கிராம் அல்லது கிட்டாசின்-400 மிலி அல்லது புரோகுளோராஸ் 23.5% + டிரைசைக்ளோசோல் 20% இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தை தெளித்து கட்டுப்படுத்தலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top