Close
ஜூன் 12, 2026 1:58 காலை

புத்தக விமர்சனம்: “எழுதுவது எப்படி? ” ஐந்தாவது தொகுதி

இலக்கிய கட்டுரை யாருக்காக எழுதுகிறோமோ அவர்களுக்கு ஏற்ற நடையில் கட்டுரை அமைய வேண்டும். சிறுவர்கள், மாணவர்கள், பொது வாசகர்கள் என அமையும் வாசகர் வேறுபாட்டை உணர்ந்து, அவர்களுக்கு ஏற்ற மொழி நடையைப் பயன்படுத்த வேண்டும். பொதுவாக எளிய தமிழ்ச் சொற்கள், எளிய தமிழ்த்தொடர்கள், சிறு சிறு வாக்கியங்கள் கொண்டனவாய் இலக்கிய கட்டுரையின் நடை அமைவது மிகவும் நல்லது.

பொருள் தெளிவு ஏற்பட்டாலன்றி, இத்தகைய எளிய நடை யாருக்கும் கைவராது. அதனால்தான், தான் மேற்கொண்ட நூலில், மேற்கொண்ட பொருட்கூறில் கட்டுரையாளர்க்கு ஆழ்ந்த புலமையும் தெளிவும் வேண்டுமென்று வற்புறுத்தப்படுகிறது. நடைத் தெளிவும் நடையினிமையும் பெறாத இலக்கியக் கட்டுரை வாசகர்க்கு அப்பொருளில் ஈடுபாட்டை உண்டாக்காது. எனவே கருத்துத் தெளிவு, நடைத் தெளிவு ஆகிய இரண்டும் கட்டுரையின் இன்றியமையக் உயிர்க்கூறுகள் என்பதை நினைவில் கொள்வது நல்லது.

–டாக்டர் அ. அ. மணவாளன் பக். 28-29

சிறுகதை

.மேலே சொன்னவை எல்லாம் வழிமுறைகளே. ஆனால் வெற்றிக்கு வழிமுறைகள் மட்டும் போதுமானவையல்ல, வளமான மனம் வேண்டும். அதற்கு நிறைய படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒரு முனைப்புடன் கவனித்தால், மரமும் செடியும், மேஜையும் நாற்காலியும் நம்மோடு சம்பாஷிக்க துடிப்பது தெரியும். இவற்றையெல்லாம் ஊன்றி உணர்ந்து உள்ளுக்குள் இருத்திக் கொள்ள வேண்டும். நிலக்கரி வைரமாவது போல, இந்த விஷயங்கள் ஒவ்வொன்றும் ஓர் உயர் கதையாய் உருப்பெறும். அது ஒரு செய்தி, ஒரு திசை, குறிப்பிட்ட ஓர் அளவு, ஒரு விளைவு என்னும் பட்டைகளை தீட்டினால் ஒரு வைரமாய் அது சுடர்விடும் என்பதில் சந்தேகமில்லை.

கடைசியாக ஒரு வார்த்தை, எழுத்து என்பது ஒரு தவம், தவப்பலன். அதற்கு குறுக்கு வழியே இல்லை. அவரவர் தவம் செய்து தமது உள்ளத்து ஒளியைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டும். உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கில் ஒளி உண்டாகுமல்லவா?

-ஜெயரதன், பக். 156.

சிறுவர் இலக்கியம்
சிறுவர் விரும்பும் வகையில்

குழந்தைகள் வளர்ந்து சிறுவர்களாகிறார்கள்; சிறுமிகளாகிறார்கள். இப்போது அவர்களுக்குப் படிக்கத்தெரியும்; நன்கு பேச வரும்; ஒரு வட்டத்திற்குள் சிந்திக்கவும் தெரியும்; அவர்கள் தம் பார்வையின் வீச்சுகளிலிருந்தே பல விஷயங்களைப் ‘பளிச்’ சென்று புரிந்து கொள்கின்றனர். எதிலும் ஒரு வேகமான போக்கு, சுறுசுறுப்பு, ஆர்வம் ஆகியன தலை காட்டத் தொடங்குகிறது.

வளர்ந்து விட்ட அச்சிறுவர்களுக்காக நாம் படைக்கும் இலக்கியத்தில் கையாளவிருக்கும் உட்பொருள் அவர்கள் வயதிற்கேற்றதாக, அவர்களுக்குப் பிடித்ததாக அமைய வேண்டும்; புலவர்களுக்குண்டான சொற்கோவைகளைச் சற்றுத் தள்ளி வைத்து விட்டு எளிமை கலந்த சொற்றொடர்களைக்

கையாண்டு, பணிவுடன் சொல்லும் பாணியை கைக்கொண்டு, நகைச்சுவையும் கலந்து அவர்கள் நெஞ்சத்தில் இடம் பிடிக்க வேண்டும்! அதே நேரத்தில் அவர்கள் குடும்பச் – சமூகச் சூழ்நிலைகள் அவர்கள் உள்ளத்தில் தவறான கருத்துக்களை விதைத்திருந்தால் அவற்றை களையும் விதத்தில், ஆரோக்கியமான கருத்துகளை உள்ளடக்கிய இலக்கியத்தைத் தேன் கலந்த மருந்தாக இயல் வாயிலோ, இசை வடிவிலோ, நாடக வடிவிலோ படைக்க வேண்டும்.

-எஸ்.ஆர்.ஜி. சுந்தரம், பக். 449-450

உயரிய சிறுகதைகளையும் ஒப்பில்லா நாவல்களையும் கருத்துச் செரிவுள்ள கட்டுரைகளையும் கவின் மிகு கவிதைகளையும் படித்தவுடன் சிலர்’ நல்ல முறையில் பொழுதைப் போக்கினோம்!’ என்று மன நிறைவு கொள்வர். வேறு சிலரோ ,’நல்ல கருத்துக்கள் சிலவற்றை நாம் இன்று கற்க வாய்ப்பு கிடைத்தது!’ என்று உளமகிழ்வர். மற்றுஞ் சிலரோ’ இத்தகைய அரிய படைப்பை இந்த ஆசிரியர் எவ்வாறு உருவாக்கினார்? இதே கருத்து நமக்கும் எழுந்ததே! நம்மால் இதைப்போன்று உருவாக்க இயலவில்லையே!’ என்னும் வியப்பு உணர்ச்சியையும் மெல்லிய ஏக்க உணர்ச்சியையும் எய்துவர்.இந்த முன்றாவது பிரிவினரின் ஏக்கத்தையும், இதயத்துடிப்பையும் தணிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்நூல்.
-பதிப்பகத்தார் பதிப்புரையில் .
……….

மகரம் தொகுப்பில், பழனிப்பா பிரதர்ஸ் வெளியிட்டிருக்கும் “எழுதுவது எப்படி? ” ஐந்தாவது தொகுதியில்,

  • இலக்கிய கட்டுரை எழுதுவது எப்படி?
  • கவிதை எழுதுவது எப்படி?
  • சிறுகதை எழுதுவது எப்படி?
  • நாவல் எழுதுவது எப்படி?
  • நாடகம் எழுதுவது எப்படி?
  • சமயக் கட்டுரை எழுவது எப்படி?
  • பயணக் கட்டுரை எழுதுவது எப்படி?
  • நகைச்சுவை கட்டுரை எழுதுவது எப்படி?
  • சிறுவர் இலக்கியம் எழுதுவது எப்படி?
  • பேட்டிக் கட்டுரை எழுதுவது எப்படி?
  • ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவது எப்படி?
  • விமரிசனக் கட்டுரை எழுதுவது எப்படி?

என்று 12 தலைப்புகளில் கருத்துச் செரிவுள்ள கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது

இந்தத் தொகுதியில். ஒவ்வொரு துறையிலும் ஆழங்கால் பட்ட தமிழ் ஆளுமைகளின் –

  • சிலம்பொலி செல்லப்பன்,
  • டாக்டர் வ.செ.குழந்தைசாமி,
  • தாமரை செந்தூர் பாண்டி,
  • சா.கந்தசாமி,
  • டாக்டர் இந்திரா பார்த்தசாரதி,
  • சுகி.சிவம்,
  • டாக்டர் வி.ஜி. சந்தோஷம்,
  • சாவி,
  • தென்கச்சி கோ. சுவாமிநாதன்,
  • கே.பி.நீலமணி,
  • ராணி மைந்தன்,
  • டாக்டர் தெ. ஞானசுந்தரம்,
  • டாக்டர் பிரேமா நந்தகுமார்,
  • சி. சு. செல்லப்பா

உள்ளிட்ட 56 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு கட்டுரையும் ஒரு தகவல் களஞ்சியம். ‘கண்டறியாதன கண்டேன்’ என்று சொல்லும் அளவுக்கு, நூல்கள், எழுத்தாளர்கள், நிகழ்வுகளை அறிமுகப்படுத்துகிறது இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும். கட்டுரை வரைந்துள்ள அத்தனை எழுத்தாளர்களைப் பற்றியும் சுறுக்கமான அறிமுகம் தரப்பட்டுள்ளது. அதுவும் ஒரு தகவல் பெட்டகம்தான்.

56 கட்டுரையாளர்களில் இலக்கிய கட்டுரை எழுதுவது எப்படி? என்ற தலைப்புக்குள் கட்டுரை வரைந்திருக்கும் டாக்டர் கலா தாக்கர் ஒருவகையில் குறிப்பிடத்தக்கவர்.

அவரைப் பற்றிய குறிப்புகளிலிருந்து: இவர் தாய்மொழியோ குஜராத்தி.படித்து, பட்டம் பெற்று, பணியாற்றி, வாழ்வது தமிழகத்தில். டாக்டர் வ.சுப.மாணிக்கம் மாணவி. எழுத்தாளர் கல்கி அவர்களின் படைப்பு அனைத்தையும் படித்து சுருக்கியிருக்கும் பெருமைக்குடையவர்.

கல்கி – முன்ஷி வரலாற்று நாவல்கள் – ஓர் ஒப்பிடு இவர் முனைவர் பட்ட ஆய்வுத் தலைப்பு.

வர்த்தமானன் பதிப்பகத்திற்கு ஒரு சுருக்கமான தமிழ் – தமிழ் அகராதியைத்தொகுத்தளித்துள்ளார். இன்னும் உள்ளது.

இன்றைய இளம் தலைமுறை ஆய்வாளர்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டிய பெண்மணி இவர்.

பழனியப்பா பிரதர்ஸ் தொகுத்துள்ள “எழுவது எப்படி? என்ற ஐந்து தொகுதிகளும் ஒவ்வொரு தமிழ் பயிலும் மாணவர் வீட்டிலும் இருக்க வேண்டிய தொகுப்பு.

பழனியப்பா பிரதர்ஸ், ‘கோனார் மாளிகை’ 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 600014
2001, ரூ. 196/-

 

புத்தக விமர்சனம்: சா.விஸ்வநாதன் , வாசகர் பேரவை புதுக்கோட்டை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top