Close
மே 11, 2024 1:50 மணி

குடியாத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அறிமுக கூட்டம்

வேலூர் மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் அறிமுக கூட்டம் குடியாத்தம் ராஜகணபதி நகரில் நடைபெற்றது.

கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகம் பேசுகையில், வருகின்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 410-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். திமுக கூட்டணியும், அதிமுக கூட்டணியும் பிரதமர் வேட்பாளர் யாரென்றே தெரியாமல் இந்த தேர்தலில் வாக்குகேட்டு வருகின்றனர். 2014ஆம் ஆண்டு நடந்த எம்பி தேர்தலில் தாமரை சின்னத்தில் நின்ற போது சுமார் 25 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தேன். 2019 ஆண்டில் நடந்த தேர்தலில் எட்டாயிரம் ஓட்டு அதிகமாக பெற்றிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன். அப்போது அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தனது சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள தி.மு.க.விற்கு உதவினார். அதனால், அந்த தேர்தலிலும் நான் தோல்வியடைந்தேன்.

ஆனால், இந்த தேர்தலில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். வேலூர் தொகுதியில் நாங்கள் நடத்திய வேலை வாய்ப்பு முகாம் மூலம் சுமார் 14 ஆயிரத்து 500 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்றவுடன் குடியாத்தம் பகுதியில் கைத்தறி பூங்கா ஏற்படுத்துவேன், சிறந்த லோக்சபா தொகுதியாக வேலூர் தொகுதியாக மாற்றுவேன். குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றின் கரையோரம் குடியிருந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்களின் வீடுகள் அகற்றப்பட்டது. வெற்றி பெற்றதும் விரைவில் அவர்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன்.

வேலூர், கே.வி.குப்பம், அணைக்கட்டு, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 6 தொகுதிகளிலும் இலவச திருமண மண்டபங்கள் கட்டித்தருவேன். 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைத்து வருவேன் என்று பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன், புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஆர்.ரவிக்குமார், பாஜக மாவட்ட தலைவர் மனோகரன், பாமக மாவட்ட தலைவர் ஜி.கே.ரவி, புதிய நீதிக்கட்சி மாவட்ட தலைவர் பிரம்மாஸ் செந்தில், தமாகா கட்சியின் மாவட்ட தலைவர் அருணோதயம், குடியாத்தம் பாஜக நகர தலைவர் சாய் ஆனந்தன், பாமக முன்னாள் மாவட்ட தலைவர் என்.குமார், தொகுதி பொறுப்பாளர் பாரத் மகி, நகர செயலாளர் ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராஜ்குமார், நகர தலைவர் தினகரன், ஓபிஎஸ் அணி நிர்வாகி எஸ்.கோதண்டன், மண்டல பொறுப்பாளர் பாரத் ப்ரவீன், பாஜக நிர்வாகிகள் வெங்கடேசன், ரமேஷ், சுரேஷ்குமார், அமமுக நிர்வாகிகள் வி.டி.சதீஷ்குமார், எம்.செந்தில்குமார், கே.பூபாலன், எம்.இளங்கோ, இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் பாபாஜி உள்பட தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top