23ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, 24ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என முதுகளை ஆசிரியர்கள் சங்கம் வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற தமிழ்நாடு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் சங்க தலைவர் நாமக்கல் ராமு, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இதுவரை தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி நடைபெற்றுள்ளது. வரும் 20ம் தேதி 4ம் கட்ட பயிற்சி நடைபெற உள்ளது.
வரும் 22ஆம் தேதி பயிற்சி மற்றும் பணி நியமன உத்தரவு பெற்று தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்திற்கு சென்று அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்கள். தொடர்ந்து வருகிற 23ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவை உரிய வாக்குச்சாவடியில் நடத்திட வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதனால் அதிகாலை 4 மணிக்கு அனைத்து ஆசிரியர்களும் ,அரசு அலுவலர்களும் எழுந்து வாக்குப்பதிவு மைய ஏற்பாடு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டால் தான் அந்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியும்.
தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 7 மணிவரை நடைபெறும், அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, வாக்குப்பெட்டிகளை மண்டல அலுவலர் பெற்று செல்லக்கூடிய நேரம் இரவு 8 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 11 மணி 12 மணி என நீண்டு கொண்டே செல்லும்.
கடந்த தேர்தலிலும் இதுபோன்ற நடந்துள்ளது. வரக்கூடிய தேர்தலிலும் இதுபோன்றே நடக்கும், மேலும் அனைத்து ஆண் ஆசிரியர்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும், 75 சதவீத பெண் ஆசிரியர்களுக்கும் தொலைதூரத்தில் தான் தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரவு 11 மணிக்கு மேல், வாக்குப்பதிவு இயந்திரங்களை மண்டல அலுவலரிடம் ஒப்படைத்து விட்டு அதற்குப் பிறகு நள்ளிரவில் பயணம் செய்து, அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மறுநாள் 24ம் தேதி காலையில்தான் தங்களது வீடுகளுக்கு சென்று சேர முடியும்.
இதிலும் போக்குவரத்து வசதி இல்லாத மலைப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணி ஒதுக்கீடு பெற்றவர்கள் மறுநாள் காலை தான் அங்கிருந்தே புறப்படுவார்கள். எனவே இவ்வாறு நள்ளிரவில் மிகுந்த களைப்புடன், தூக்கம் இல்லாமல் கிளம்பி காலையில் வீடு வந்து சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் அதற்குப் பிறகு பள்ளிக்குக் கிளம்பி செல்வது என்பது மிகுந்த மனச்சோர்வைத் தரும்.
எனவே, தமிழ்நாடு முழுவதும், சட்டசபைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் வரும் 24ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள், மாற்றுப் பணியாக கருதி விடுமுறை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.




