நாமக்கல் ஆஞ்சநேயருக்கு இன்று 300 கிராம் எடையுள்ள வெள்ளி வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் உருவான 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள்பாலித்து வருகிறார். ஆஞ்சநேயருக்கு தினசரி காலையில் வடைமாலை அலங்காரமும், தொடர்ந்து அபிஷேகமும் நடைபெறும். பின்னர் சாமி மலர் அலங்காரம், வெள்ளிக்கவச அலங்காரம், முத்தங்கி அலங்காரம் அல்லது தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்று 23ம் தேதி பக்தர் ஒருவர் வெள்ளி வெற்றிலை மாலையை காணிக்கையாக வழங்கினார். சுமார் 300 கிராம் எடையில் 27 வெற்றிலைகள் வடிவில் உருவாக்கப்பட்ட அந்த மாலை, உச்சிக்கால பூஜையின்போது சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறநிலையத்துறை உதவி கமிஷனர் இளையராஜா மற்றும் அலுவலர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.




