Close
ஏப்ரல் 23, 2026 10:00 மணி

ஈமு பண்ணை உரிமையாளர்களின் வீட்டுமனைகள் 22ம் தேதி பொது ஏலம்

நாமக்கல்லை நகரைச் சேர்ந்த ஈமு பண்ணை உரிமையாளர்களின் வீட்டுமனைகள் வரும் 22ம் தேதி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

நாமக்கல் நகரில், மோகனூர் ரோட்டில் இயங்கிவந்த செல்லம் ஈமு பார்ம்ஸ் மற்றும் வேலவன் கார்டன் சிட்டி என்ற நிறுவனம் பொதுமக்களிடம் நிதி மோசடி செய்ததால் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவு போலீசாரால் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது. கோவை, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன்கள் பாதுகாப்பு சட்டம் சிறப்பு நீதிமன்ற உத்தரவின்படி, ஈமு பண்ணை உரிமையாளர்கள் சிவக்குமார், கனகம் ஆகியோரின் கீழ்க்கண்ட விபரப்படியான அசையா சொத்துக்கள் ஏலம் விடப்படவுள்ளன.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பிள்ளைகளத்தூர் கிராமத்தில் உள்ள, தலா 2,360 சதுர அடி கொண்ட 2 வீட்டுமனைகள், வருகிற 22ம் தேதி திங்கள்கிழமை, மாலை 3 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  டிஆர்ஓ மூலம் பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.

ஏல நிபந்தனைகள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூர். கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நாமக்கல், திருச்செங்கோடு ஆர்டிஓ அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

ஏல நிபந்தனைகளுக்கு உட்பட்டு, விருப்பமுள்ளவர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், ஏல தேதிக்கு முன்பாக, நாமக்கல், பொருளாதார குற்றப் பிரிவு டிஎஸ்பி மூலமாக ஏல சொத்துக்களை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top