Close
ஏப்ரல் 24, 2026 12:57 காலை

நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை கைவிடக்கோரி நாமக்கல்லில் வக்கீல்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

நீதிமன்றங்களில்  வழக்குகளுக்கான இ-பைலிங் முறையைக் கைவிடக்கோரி, நாமக்கல்லில் வக்கீல்கள் சங்க கூட்டமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற, வக்கீல்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டு குழுவின் மாநில துணைத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.

நீதிமன்றங்களில் போதிய இண்டர்நெட் வசதி ஏற்படுத்தி, தகுதி வாய்ந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தும் வரை இ-பைலிங் நடைமுறையை கைவிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் பிரபாகர் கூறியதாவது:

நீதிமன்றங்களில் வழக்குகள் இ-பைலிங் முறையை உடனடியாக உயர்நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், வக்கீல்கள் சங்கங்கள், சம்மேளனங்கள் போராடி வருகின்றோம்.

இந்த முறையால், வக்கீல்களுக்கும், வழக்காடிகளுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இ-பைலிங் முறையில், ரிட்டிகேசன் மீது இடைக்கால தடை உத்தரவு பெற மனு அல்லது வழக்கு சமர்ப்பித்தால், உடனடியாக நிவாரணம் கிடைக்க முடியாமல், காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், வழக்காடிகளுக்கு உரிய நேரத்தில் நிவாரணம் கிடைக்காமல் போய்விடுகிறது.

கிரிமினல் வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர் வரவில்லை என்றால், மனுதாக்கல் செய்யும்போது, மனு காலதாமதம் ஆவதால், குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றம் மூலம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு சிறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

எனவே இ-பைலிங் முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வக்கீல்கள் பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என அவர் கூறினார்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ராசிபுரம், திருச்செங்கோடு, ப.வேலூர், குமாரபாளையம் உள்ளிட்ட கோர்ட்டுகளிலும் வக்கீல்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top